மும்பை தாக்குதல் ஹீரோவுக்கு பரிசு ரூ. 500 மட்டுமே
மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தை முதலில் பார்த்து தனது உயிரை துச்சமாக மதித்து மற்றவர்களுக்கு தகவல் கொடுத்த ஒரு ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்ற துணை புரிந்த ரயில்வேயில் பணிபுரியும் ஒரு வீரருக்கு சுமார் ஆறு மாதத்துக்கு பின் விருதும், பரிசும் அளிக்கப்பட்டது. அதுவும் பரிசு தொகை ரூ. 500 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த சில தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் முதலில் தாக்குதல் நடத்தியது மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தான். அங்கு நுழைந்த தீவிராவதிகள் 13வது மற்றும் 14வது பிளாட்பார்மில் வெடிகுண்டுகளை வீசினர்.
பின்னர் கண்மூடித்தனமாக மக்களை சுட்டுத்தள்ளினர். அப்போது அங்கு இரவு பணியில் இருந்த பப்லூ குமார் தீபக் என்ற ரயில்வே அறிவிப்பாளர் இந்த சம்பவத்தை முதலில் பார்த்துள்ளார்.
தனது உயிரையும் பற்றி பொருட்படுத்தாமல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் செய்தியை சக அறிவிப்பாளர் விஷ்ணு ஷின்டேவுக்கு தெரிவித்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை காப்பாற்றியுள்ளார்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளார். ஒரே சமயத்தில் இரண்டு பிளாட்பார்ம்களில் குண்டு வெடித்ததை அடுத்து இரண்டு மேற்பட்ட தீவிரவாதிகள் வந்துள்ளதை உணர்ந்து, பெரிய படையுடன் வருமாறு ரயில்வே போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இவரிடம் இருந்து தகவல் பெற்ற விஷ்ணு ஷின்டேவுக்கு உடனடியாக ரூ. 10 லட்சம் பரிசு அளித்துள்ளது. ஆனால், இவரின் துணிச்சலான சேவையை அரசு கண்டுகொள்ள தவறிவிட்டது. தனக்கு அரசின் கெளரவம் கிடைக்கும் என எதிர்பார்த்த ப்பலூவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இதையடுத்து அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி ரயில்வே மண்டல இயக்குனரிடம் இது தொடர்பாக வி்ண்ணப்பம் ஒன்று கொடுத்தார். சுமார் 6 மாதங்களுக்கு பின் இம்மாதம் 7ம் தேதி இந்திய அரசு இவரை கெளரவிக்க முடிவு செய்தது.
அதுவும் அவருக்கு ஏமாற்றம் கொடுப்பதாகவே இருக்கிறது. அதற்கு காரணம் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு தொகை ரூ. 500 என்பது தான்.