வைகாசி விசாகம்:பழனியில் இன்று திருக்கல்யாணம்-நாளை தேரோட்டம்
பழனி: வைகாசி விசாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று ஜூன் 4ம் தேதியும், தேரோட்டம் நாளை 5ம் தேதியும் நடக்கிறது.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசத்துக்கு போல் சிறப்பாக கொண்டாடப்படும் மற்றொரு விழா வைகாசி விசாகமாகும். இத்திருவிழாவின் போது முத்துக்குமார சுவாமிக்கு வசந்தமாலை அணிவிக்கப்படும். இதனால் இந்த விழாவுக்கு வசந்தோற்சவம் என்ற பெயரும் இருக்கிறது.
இந்நிலையில் வைகாசி விசாகம் திருவிழா கடந்த மே 29ம் தேதி பழனியில் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று ஜூன் 4ம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் முத்துக்குமாரசாமிக்கும், வள்ளி, தெய்வாணைக்கும் நடந்தது.
நாளை ஜூன் 5ம் தேதி வைகாசி விசாகமாகும். இதையடுத்து தேரோட்டம் நடக்கிறது. பக்தர்களின் உற்சாக குரல்களோடு தேர் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நான்கு ரத வீதிகளிலும் உலா வரும்.
ரூ. 2 லட்ம் வெள்ளி கவசம்...
இந்நிலையில் உற்சவ மூர்த்தி முத்துக்குமார சுவாமிக்கு திருச்சி ஓம் ஜுவல்லர்ஸ் குப்தா, விஜயகுமார் பிரதர்ஸ் மற்றும் சேலம் ரகோத்தமன் ஆகியோர் சுமார் 6.6 கிலோ எடை கொண்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக் கவசங்களை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
முத்துக்குமாரசாமிக்கு இரு உடல் பாகங்கள், பாதம், கை, மகரம், கிரீடம் என 12 பாகமும், வள்ளி, தேவசேனா ஆகியோருக்கு பாதம், கிரீடம், உடல்பாகம், அஸ்தம் என 16 பாகங்கள், ஒரு வெள்ளி வேல் என மொத்தம் 29 பிரிவுகளாக வெள்ளிப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.