வைகாசி விசாகம்-உவரியில் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திகடன்
திசையன்விளை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு உவரியில் பக்தர்கள் கடலில் இருந்து ஓலை பெட்டியில் மணல் சுமந்து வந்து தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சாமி திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. மாலை நாகர்கோவில் ராணி பிரியன் இயங்கிய சுயம்புலிங்க சாமி சுந்தர கீதங்கள் பக்தி பாடல் சிடி வெளியிட்டு விழா நடந்தது.
வைகாசி விசாக திருவிழா நாளான நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக உவரிக்கு வந்து கடலில் புனித நீராடினார். பின்னர் கோயிலை வலம் வந்து சுவாமி தரிசனம் பெற்றனர். காவடி, பால்குடம் சுமந்து வந்தும், முடி காணிக்கை செலுத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேலும் சில பக்தர்கள் கடலில் இருந்து ஓலை பெட்டியில் மணல் எடுத்து கடற்கரையில் குவித்து வித்தியாசமான முறையில் நேர்த்திகடனை செலுத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு மகர மீனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.