தஞ்சையில் சந்திரகாந்தம், முருகடியானுக்கு கரிகாலன் விருது வழங்கப்பட்டது
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ் எழுத்தாளர்கள் சந்திரகாந்தம், முருகடியான் ஆகியோருக்கு கரிகாலன் விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கரிகாலன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் தஞ்சாவூர் திமுக எம்.பி.யும், மத்திய நிதித் துறை இணை அமைச்சருமான பழனிமாணிக்கம் கலந்து கொண்டு, விருது வழங்கினர்.
இந்த ஆண்டுக்கான விருது 200 ஆண்டு கால மலேசிய இந்தியர்கள் என்ற நூலை எழுதிய ப.சந்திரகாந்தனுக்கும், சங்கமம் என்ற நூலின் ஆசிரியரான சிங்கப்பூர் எழுத்தாளர் முருகடியான் என்பவருக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் பழனி மாணிக்கம் பேசுகையில்,
வெளிநாட்டு வாழ் தமிழர்களின் படைப்புகளும் பங்கேற்கும் போட்டிகளுக்கு தமிழ் பல்கலைக்கழகம் அதிக முன்னுரிமை கொடுப்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தமிழக எழுத்தாளர்களும், வெளிநாட்டு எழுத்தாளர்களுடன் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
தமிழ் வளர்ச்சியின் தாயகம் சிங்கப்பூர்...
விழாவுக்கு தலைமை வகித்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் பேசுகையில்,
சுமார் 8 கோடிக்கும் ஏற்பட்ட தமிழர்கள் 56 நாடுகளில் வாழ்கின்றனர். இவர்களில் இந்தியாவுக்கு வெளியே வாழ்பவர்களை 19ம் நூற்றாண்டுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள். அதற்கு பின் புலம்பெயர்ந்தவர்கள் என இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
முதலில் சென்றவர்கள் வாணிபம் செய்யவும், சமய நோக்கிலும் சென்றனர். அடுத்தவர்கள் வறுமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக சென்றவர்கள். இவர்கள் அந்த நாடுகளில் சந்தித்த இடம்பாடர்கள் கடுமையானது.
இப்படிச் சென்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தையும், மலேசியா இரண்டாவது இடத்தையும் பெறுகிறது. தமிழ் வளர்ச்சியின் தாய்நாடாகத் திகழும் அளவுக்கு இந்த இரு நாடுகளிலும் தமிழர்கள் வளர்ந்திருக்கின்றனர். தமிழை வளர்த்துள்ளனர்.
நமது மக்கள் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் நமது மொழியின் வளர்ச்சியிலும் நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும். நமது மொழிக்கு நமது வாழ்நாளில் சிறப்பான பங்களிப்பு வழங்க வேண்டும் என ஒவ்வொரு தமிழனும் கருத வேண்டும் என்றார் ராஜேந்திரன்.