அழிந்துவிடும் அபாயத்தில் குற்றால தொல்பொருள் அருட்காட்சியம்
குற்றாலம்: குற்றாலம் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் தமிழர்களின் வரலாற்றை நினைவு கூறும் அரிய, பழம் பொருட்கள் கேட்பாரற்று தெருக்களில் கிடக்கிறது. முறையான பரமாரிப்பு இல்லாத காரணத்தால் இந்த தொல்பொருள் அருங்காட்சியகம் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடி, தமிழ் குடி என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தமிழகத்தில் நெல்லை மாவட்ட பகுதிகளில் தொல்பொருள் துறை பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வந்துள்ளது. ஆதிச்சயநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி தமிழர்களின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றியது.
மூவேந்தர்கள், தமிழ் மக்கள் மற்றும் சில பல குறுநில மன்னர்கள் ஆகியோர் தமது சரித்திரத்தை மண்ணில் கலை பொக்கிஷங்களாக, பொருட்களாக, போர் தளவாடங்களாக, நாணயங்களாக அடுத்து வந்த தலைமுறையினருக்கு விட்டு சென்றுள்ளனர்.
இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்ததை வைத்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்றைய வாழ்க்கை, இன்றைய வரலாறு, இன்றைய செயல், நாளைய சரித்திரம் என அறிஞர்கள் சொல்வார்கள். இதை நிரூபிக்கும் இந்த பொருட்களின் தன்மையும், அதன் விலை மதிப்பும், வரலாறும் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.
அப்படி கிடைக்கும் அரிய பொருட்களில் நாகரிகம், வாழ்க்கை முறை, கல்வெட்டுகளையும், அதில் காணப்படும் வாசகங்களையும் வெளிஉலகத்திற்கு கொண்டு வர அரசு தொல் பொருள் ஆய்வு துறையை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு பணியாளர்களுக்கு பயிற்சியளித்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து அப்பகுதியில் கிடைக்கும் அரியவகை பொருட்களை கைப்பற்றி பாதுகாக்கவும், மேலும் அந்த பகுதியில் வேறு ஏதாவது முக்கிய பொருட்கள் கிடைக்கிறதா என ஆராய்ச்சி மேற்கொள்வதும் உண்டு.
இத்துறையின் சார்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சேர மன்னர்கள் ஆட்சி புரிந்த கேரள நுழைவு பகுதியும், தமிழக எல்லையும், பாண்டிய மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட அன்றைய தென்காசி தாலுகா பகுதியுமான புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஒரு அருட்காட்சியகம் அமைக்கப்பட்டது.
இந்த அருட்காட்சியகத்தில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அதன்பின்னர் மன்னர் ஆட்சிகாலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் தளவாடங்கள், அரியவகை சிலைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இந்த அருட்காட்சியகத்தில் உள்ளன.
மேலும் வடநாடுகளை போல் தென் தமிழகத்திலுள்ள தென்காசி தாலுகா பகுதியிலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன் உடன்கட்டை ஏறுதல் வழக்கம் இருந்துள்ளதை காட்டும் அரிய வகை சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்கு உள்ளது.
இப்படி அரிய பொக்கிஷங்கள் நிறைந்துள்ள இந்த அருட்காட்சியகத்தினை பொதுமக்கள் சுற்றி பார்க்கவும், அவற்றை பாதுகாக்கவும் தற்போது போதிய வசதிகள் இல்லை. இதனால் இந்த அரிய பொருட்கள் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் சாலையின் ஓரத்திலும், வழிபாதையிலும் கிடக்கிறது.
இவற்றை விரைந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால சீசனுக்கு வந்து செல்லும் பல லட்சக்கனக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிடவும், அவர்கள் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த அருட்காட்சியகத்தை புதிய இடத்தில் புனரமைத்திட வேண்டும்.
இல்லையேனில் அரிய பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும் இந்த அருட்காட்சியம் பரமாரிப்பின்றி அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொல்பொருள்துறை சீரமைப்பது காலத்தின் அவசியம், அவசரம்...செய்யுமா அரசு...?
'தட்ஸ்தமிழ்' எதிரொலி-அருட்காட்சியகத்தில் அமைச்சர் ஆய்வு