நாட்டின் கடனை அடைக்க கூலித் தொழிலாளி கொடுத்த ரூ. 5000!
ராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (31). கூலித் தொழிலாளியான இவருக்கு மாலதி என்ற மனைவியும், 2 மகன், ஒரு பெண் குழந்தைகளும் உள்ளன.
குடும்பத்துடன் தற்போது திருச்சியில் வசித்து வருகிறார் முத்துராமலிங்கம். அங்குள்ள பிரபலமான காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பிழைப்பு நடத்தி வருகிறார் முத்துராமலிங்கம்.
கஷ்ட ஜீவனம், குடும்பச் சுமை, நிதி நெருக்கடி என வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்குமே உள்ள சிரமங்கள் முத்துராமலிங்கத்துக்கும் உள்ளது. ஆனால் அதையும் தாண்டிய தேசப் பற்றையும், தேசியக் கடமையுணர்வையும் வெளிப்படுத்தி உயர்ந்து நிற்கிறார் முத்துராமலிங்கம், அனைவரையும் வியப்புக் கடலில் தள்ளியுள்ளார்.
அப்படி என்ன செய்து விட்டார் முத்துராமலிங்கம்? அத்தனை இந்தியர்களும் செய்ய வேண்டியதை ஞாபகப்படுத்தியதுதான் முத்துராமலிங்கம் செய்த அந்த காரியம்.
கடந்த மே 8ம் தேதி 'இந்தியாவின் கடனை அடைக்க" என்று குறிப்பிட்டு ரூ.5,000க்கு டி.டி. எடுத்து,
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார். பிரதமர் அலுவலகம் அந்த நிதியைப் பெற்று பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்துள்ளது. அத்தோடு நில்லாமல், மறக்காமல் முத்துராமலிங்கத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் அலுவலகம் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளது.
எனக்கு ஒரு நாளைக்கு ரூ. 100 முதல் 150 வரை ஊதியமாக கிடைக்கும். அந்தப் பணத்தை சேர்த்து வைத்துத்தான் நான் பிரதமருக்கு 5000 ரூபாயை அனுப்பினேன்.
நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.30,000ம் கடன் உள்ளது என்று பத்திரிகையில் படித்தேன். எனவே, சேமித்த பணத்தை, கடனை அடைக்க என்று எழுதி பிரதமருக்கு அனுப்பினேன் என்கிறார் தான் செய்த மகத்தான காரியத்தின் மகத்துவம் முழுமையாகப் புரியாமல்.
உண்மையில், இவருக்குத்தான் பாரத ரத்னா கொடுக்க வேண்டும்..!