For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரமலானின் மகிமை!

By Staff
Google Oneindia Tamil News

Ramadan Mosque
(தொகுப்பு: மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி)

நாளை முதல் புனித ரமலான் நோன்பு தொடங்குகிறது.

புனிதமிகு ரமலான் மாதம் முஸ்லிம்களின் அளப்பெரும் பொக்கிஷமாகும்.

ரமலான் மாதத்தின் முதல் நாள் இரவில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. நரகத்திற்கு தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகின்றன.

இந்தப் புனிதமிகு மாதத்தின் மிக முக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் 'சுபுஹுஸாதிக்' (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.

ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:

""அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்""

""நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்""

""சுவனலோகத்தில் 'ரய்யான்" என்னும் வாசல் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்""

நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன.

'"படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்""

'"வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப்படுகிறது""

'"ரமலான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்""

எனவே முஸ்லீம்கள் ரமலான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமலான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!

நோன்பின் நிய்யத்:

நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போதுமானாதாகும்.

தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:

நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா.

இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.

உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.

நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமலான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

ஸஹர்-நோன்பு பிடிப்பது:

ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிட வேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.

ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.

இஃப்தார்- நோன்பு திறப்பது:

சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்து விடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.

மேகத்துடைய காலங்களில் இஃப்தார்- நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர்- நோன்பு பிடிப்பதை தீவிரமாக்குவதும் அவசியமாகும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.

இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவைகளைக் கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக் கொண்டுள்ளனர். அது தவறாகும்.

நோன்பு திறக்கும் துஆ:

அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.

""யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

நோன்பின் முறித்தல்கள்:

1) மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது.
2) வேண்டு மென்றே வாய் நிரம்ப வாந்தியெடுப்பது.
3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது.
4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது.
5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது.
6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது.
7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப் பாக்கு சுவைப்பது.
8)அதிகம் ரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது.
9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல.
10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.

வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்த நோன்பை 'களா" செய்ய வேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.

நோன்பு வைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன்களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறு நிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.

நோன்பை முறிக்காதவைகள்:

1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது.
3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது.
4) நறுமணம் நுகர்வது.
5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது.
6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது.
7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது.
8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது.
9) எச்சில், சளியை விழுங்குவது.
10) வேண்டுமென்றே வாய நிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது.
11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது.
12) இன்ஜெக்‌ஷன்- டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.

நோன்பின் மக்ருஹ்கள்:

1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது.
2) புகையிலை கொண்டு பல் துலக்குவது.
3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது.
4) ரத்தம் குத்தி வாங்குவது.
5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமலானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது.
6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.
இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.

நோன்பு வைக்காமலிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்:

1) வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில்லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை 'களா" செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை 'களா" செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை 'களா" செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.

5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்திலிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.

6) நோன்பை விட்டுவிடு என்று கொலை மிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை 'களா" செய்யவேண்டும்.

7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்டமிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை 'களா" செய்வது கட்டாயமுமாகும்.

8) ஹைள்- மாதவிடாய் , நிபாஸ்- பிரசவத்திற்கு பின் ஏற்படும் ரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் 'களா" செய்வது கட்டாயமாகும்.

தராவீஹின் சட்டங்கள்:

புனித ரமலான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.

எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது- குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறைவேற்றிய நன்மைதான் கிடைக்கும்.

குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.

இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.

வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.

தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.

ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.

குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப்– மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.

இஃதிகாப்:

புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.

ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.

இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.

இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.

ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.

1) தன்னுடைய தேவைக்கு வெளிக் கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.

2) மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிளம்பிச் செல்வது.

அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X