திருக்குறளை உலகமெங்கும் பரப்ப வேண்டும்-கலாம் வேண்டுகோள்
திருக்குறளின் வாழ்வியல் நெறிகளையும், திருவள்ளுவரின் வரலாற்றையம் உலகம் முழுவதும் பரப்ப தமிழ் படைப்பாளிகள் முன் வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
திருக்குறள் நெறிகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்தார்.
காண்டீபன் என்ற பெயரில் எழுதி வரும் ஜகன்மோகன் ஐஏஎஸ் எழுதிய கங்கை கொண்ட செம்மொழி என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ஆளுனர் மாளிகையில் நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கொண்டார்.
கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட அதன் முதல் பிரதியை அப்துல் கலாம் பெற்று கொண்டார். விழாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒளவை நடராஜன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பேசினர்.
கலாம் பேசுகையில்,
நாம் பல்வேறு பெரும் புலவர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளை படித்துள்ளோம். என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் இருக்கும் 1,330 குறள்களில் இல்லாத கருத்துக்கள் எதுவும் இல்லை. அவரது இலக்கிய பணி மகத்தானது. ஈடு இணையற்றது.
மாபெரும் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள் காட்டும் நெறிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும்.
சமுதாய முன்னேற்றத்துக்கு திருக்குறள் காட்டும் வாழ்கை முறையையும், வாழ்வியல் நெறிகளையும் அவரது வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவ செய்ய தமிழ் இலக்கிய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றார் அப்துல் கலாம்.
கலாம் வாழும் வரை நம்பிக்கை வாழும்...
விழாவில் வைரமுத்து பேசுகையில்,
இந்தியாவுக்கு வெளியிலும் நாட்டின் மனித அடையாளமாகத் திகழ்பவர் அப்துல் கலாம். அரசியலையும் கடந்து ஜனாதிபதியாக விளங்கினார். அவரால் நமது இளைய சமுதாயம் புத்துணர்வு பெற்றது. கலாம் வாழும் வரை நம்பிக்கையும் வாழும்.
இந்தி மொழியில் வேரூன்றியுள்ள தமிழ்ச் சொற்களை திறனாய்வு செய்து 'கங்கை கொண்ட செம்மொழி' நூலில், நூலாசிரியர் நிறுவியுள்ளார்.
வாணிபம், கலை, படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒரு மொழி மற்றொரு மொழியுடன் கலந்து உறவாடுகிறது.
உலக மயமாக்கலால் சமூகங்களிடையேயும், நாடுகளிடையேயும் வணிகத்திலும் நெருக்கம் ஏற்படுகிறது. இது குறித்து சமூக விஞ்ஞானக் கருத்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
தமிழ் நிலைத்து நிற்கும்...
உலகமயமாக்கலின் விளைவுகளால் நமது மாறுபாடுகள் தூக்கி வீசப்படும். பண்பாடுகள் சிதையும். சின்னச் சின்ன மொழிகளும் அழிந்து போகும்.
ஆனால், தமிழ், ஆங்கிலம், இந்தி, சீனம், அரபி, ஸ்பானிஷ் உள்ளிட்ட 6 மொழிகள் மட்டுமே நிலைத்து நிற்கும். இம் மொழிகளில் மட்டுமே, அழிக்க முடியாத வேர்ச்சொற்கள் நிறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
ஒரு மொழியை மற்றொரு மொழி மற்றும் தேசிய இனங்கள் அங்கீகரிக்க வேண்டும். எந்த ஒரு மொழியையும் அரசுதான் காப்பாற்ற வேண்டும். இதற்கு அடுத்தபடியாக மொழியைக் காக்க, ஆசிரியர்கள், படைப்பாளிகள், இதழியலாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் எந்த ஒரு தேசிய மொழியும் நிலைக்க முடியாது என்றார் வைரமுத்து.