கு.க-ஆண்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை!
விழுப்புரம்: குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள பெரும்பான்மையான ஆண்கள் முன்வருவதில்லை. இதனால் தங்களது ஆண்மை பறிபோய்விடும் என அவர்கள் பயந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என தெரிகிறது.
இந்தியாவின் மக்கள் தொகை 115 கோடியை தாண்டி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து இந்திய அரசு குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த குடும்ப கட்டுப்பாடு முறை பெண்களுக்கும், ஆண்களுக்கும் செய்யபடுகிறது. இதில் பெண்களை விட ஆண்களுக்கு செய்வது வெகு சுலபமானது. அறுவை சிகிச்சை எதுவும் தேவைப்படாது. என்றாலும் இந்த குடும்ப கட்டுப்பாட்டை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் செய்து வருகின்றனர்.
ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வது அரிதாகி வருகிறது. இது ஆணாதிக்க சமுதாயத்தின் விளைவுகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு முறையில் விந்துவில் உயிரணுக்கள் சேரும் இடத்தில் சிறிய (ஊசியின் நுனியை விட மெல்லிய) துளை போடப்பட்டு ஒரு சிறிய மூடிச்சு போடப்படுகிறது. இதையடுத்து அந்த ஆண்மகனின் விந்துவில் உயிரணுக்குள் இல்லாமல் செய்யப்படுகிறது.
உயிரணுக்கள் இல்லாமல் போனால் ஆண்மை தன்மை குறைந்துவிடும் என்பது முட்டாள்தனமானது. இதனால் குழந்தை தான் பிறக்காத ஒழியே. மற்றபடி எந்த சிக்கலும் ஏற்படாது. மேலும், இந்த குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முடிந்த அடுத்த நிமிடமே ஆண்கள் தங்களது வழக்கமான வேலைகளை செய்யலாம்.
பெண்களை விட ஆண்களுக்கு இது போன்ற அறுவை சிகிச்சைகள் செய்வது தான் சிறந்தது என்பதாலும், ஆண்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற நோக்கத்திலும் அரசு குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ. 1,100 பணம் வழங்குகிறது. பெண்களுக்கு ரூ. 600 கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் குடும்ப கட்டுப்பாடு குறித்து மாநில அரசுகள் ஒரு பக்கம் சீரிய நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இது நடைமுறையில் நிறைய சிக்கல்கள் எழுந்து வருகிறது. இதனால் குடும்ப கட்டுப்பாடு குறைவாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு ஆண்டும் இத்தனை பேர் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் ஆண்கள் குடும்ப கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டம் தான் மிகவும் பின்தங்கி நிற்கிறது.
இந்த மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 1500 ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அங்கு 2.5 சதவீத இலக்கு தான் எட்டப்பட்டுள்ளது. வெறும் 37 ஆண்கள் மட்டுமே குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டுள்ளனர்.
பெண்களும் பயப்படுகிறார்கள்...
இது தொடர்பாக மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தனசேகரன் கூறுகையில்,
ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 240 விளம்பரங்களை வைக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் துண்டறிக்கைகளும், 10 ஆயிரம் கையேடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு விளம்பரத்துக்காக ரூ.90 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை எட்ட முடியவில்லை. அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 500 ஆண்களுக்காவது குடும்ப கட்டுப்பாடு செய்யப்படும்.
இந்த அறுவை சிகிச்சையால் ஆண்மைக் குறைவு ஏற்படாது. பல பெண்கள் தங்களது கணவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற தவறான பயத்தில் தடுத்து விடுகின்றனர். இதனால் பெண்கள் மட்டுமே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். அவர்களுக்கும் நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.