குற்றாலத்தில் போலீசார் ரெய்டு-பயணிகள் அவதி
குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குவிகின்றனர். இதனால் லாட்ஜ்களில் கடந்த சில நாட்களாக கூட்டம் நிரம்பி வழிகின்றது.
இந்நிலையில் லாட்ஜூகளில் சட்ட விரோத செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து குற்றாலம் போலீசார் நள்ளிரவில் லாட்ஜ்களில் சோதனை போட்டனர்.
அனைத்து லாட்ஜ்களிலும் சோதனையிட்ட அவர்கள். சந்தேகப்படும்படியானவர்களை மட்டும் விசாரித்து இருக்கலாம். ஆனால், அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று கதவை தட்டி தூங்குபவர்களை எழுப்பி போலீசார் விசாரணை நடத்தினர்.
கணவன், மனைவி என்று கூறி தங்கியிருப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனால் உண்மையான தம்பதியினர் பலர் அதிர்ச்சியடைந்தனர்.
விபசாரம் எங்கு நடக்கிறது என்பது போலீசாருக்கு நன்றாக தெரியும். அதனை கண்டுபிடித்து தடுக்காமல் போலீசார் வேண்டும் என்றே அனைத்து அறைகளிலும் ரெய்டு நடத்தி சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு செய்கின்றனர். இதனால் பயணிகள் உடனே லாட்ஜை காலி செய்து விடுகின்றனர் என லாட்ஜ் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
இது குறித்து லாட்ஜ் உரிமையாளர் ஒருவர் கூறும்போது போலீசார் ரெய்டு நடத்துவதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரண்ட் ஆப் போலீஸ் என்ற பெயரில் வாலிபர்களை அழைத்து வந்து ஒவ்வொரு அறையின் கதவையும் தட்டி நள்ளிரவில் சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
அப்படி ரெய்டு செல்லும் போது லாட்ஜ்களில் சம்பந்தப்பட்ட நபர் உடனிருந்தால் சுற்றுலா பயணிகளிடம் விளக்கம் கொடுத்து அவர்களின் அச்சத்தை போக்க வழியுண்டு. ஆனால் போலீசார் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. எந்தெந்த இடங்களில் விபசாரம் நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும்.
ஆனால் அங்கு அவர்கள் செல்லாமல் மற்ற இடங்களில் சென்று இடையூறு செய்வது வருத்தம் தருகிறது. இதே நிலை நீடித்தால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துவிடும் என்றார்.