சமாதானத்தில் இலங்கை தோல்வி-சமரவீரா
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு வென்றிருக்கலாம். ஆனால் அமைதியை ஏற்படுத்துவதில், இலங்கை அரசு தோல்வி கண்டிருக்கிறது என்று முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், ராஜபக்சேவால் ஓரம் கட்டப்பட்டு புதிய கட்சியைத் தொடங்கியுள்ளவருமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா கூறியுள்ளார்.
இலங்கை சுதந்திராக் கட்சி தற்போது முழுக்க முழுக்க ராஜபக்சேவின் கட்சியாக மாறி விட்டது. பண்டாரநாயகே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இக்கட்சியில் ஓரம் கட்டப்பட்டு விட்டனர்.
சந்திரிகா அரசியலிலிருந்தே ஒதுங்கி விட்டார். அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சியில் ஒரு முக்கியத்துவமும் இப்போது இல்லை.
அப்படி ஓரம் கட்டப்பட்டவர்களில் ஒருவர் சமரவீரா. இவர் சந்திரிகா ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர்.
தற்போது இவர், இலங்கை சுதந்திராக் கட்சி (மக்கள்) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
தலவாக்கல என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் சமரவீரா பேசுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பானது பிரச்சினையின் ஒரு பிரதிபலிப்பே தவிர பிரச்சினை அதுவல்ல. இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வைக் காணவில்லை என்றால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும். மேலும் பல பிரபாகரன்களை நாம் சந்திக்க நேரிடும்.
அரசியல் தீர்வு விஷயத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதை ராஜபக்ச பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார் சமரவீரா.
சந்திரிகாவை இழுக்க முயற்சி...
இதற்கிடையே, சந்திரிகாவை மீண்டும் தீவிர அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகளை சமரவீரா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பல முக்கிய எதிர்க்கட்சிகளும் இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளன. இலங்கை சட்டப்படி மீண்டும் சந்திரிகாவால் அதிபராக முடியாது. இருப்பினும் அவரால் பிரதமராக முடியும். அதாவது எம்.பியாக முடியும். எம்.பியாகும் ஒருவரால் பிரதமராவது தடையான ஒன்றல்ல.
இதைக் கருத்தில் கொண்டு, ராஜபக்சேவுக்கு நெருக்கடி அளிப்பதற்காக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சந்திரிகாவை தீவிர அரசியலுக்கு இழுத்து வர சமரவீரா தீவிரமாக உள்ளாராம்.
சந்திரிகாவின் சிஷ்யராக இருந்தவர்தான் ராஜபக்சே. அவர் பதவி விலகிய பின்னர் ராஜபக்சே அதிபர் தேர்தலில் நிறுத்தப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
அந்தத் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார். இதனால் தமிழர் பகுதிகளில் யாரும் வாக்களிக்கவில்லை. இதன் காரணமாக எதிர்மறையான சூழ்நிலை இருந்தும் கூட ராஜபக்சே வெற்றி பெற்று விட்டார். ஒரு வேளை தமிழர்கள் வாக்களித்திருந்தால் ராஜபக்சே தோல்வியடைந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.