ஈரோடு புத்தக திருவிழா-கலாம் பங்கேற்பு
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் புத்தகத் திருவிழா வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கூறுகையில்,
கொங்கு மண்டலத்தை அறிவுக் களஞ்சியமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இப்பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறோம்.
நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை இளைய சமுதாயத்தினரிடையே வளர்க்கும் நோக்கில், இப்புத்தக விழா நடத்தப்படுகிறது.
இப்போது 5ம் ஆண்டில் ஈரோடு புத்தக திருவிழா அடியெடுத்து வைக்கிறது. இதன் தொடக்க விழாவில் சந்திராயன் திட்டத் தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொள்கிறார். நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பங்கேற்கிறார்.
கண்காட்சியில் 164 அரங்குகள் அமைகின்றன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. வெளி மாநிலங்கள் உள்பட பிரபலமான நூல் வெளியீட்டார்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு 6 லட்சம் பேர் வரை கண்காட்சிக்கு வருவார்கள் என்றும், ரூ. 5 கோடி ரூபாய் வரை புத்தகங்கள் விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றார்.