சென்னைக்கு குடிநீர் வழங்கிய ஏழுகிணறுகள்' பாழடைந்த பரிதாபம்
சென்னை: பழங்காலத்தில் சென்னை நகருக்கு குடிநீர் சப்ளை செய்த ஏழுகிணறுகள், இன்று பாழடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கின்றன.
சென்னை நகரின் வடக்கே பாரிமுனை பகுதியில் உள்ளது ஏழுகிணறு. இந்த இடத்திற்கு ஏன் ஏழுகிணறு' என்று பெயர் வந்தது என்பது பலருக்குத் தெரியாது.
பழங்கால சென்னை வரலாற்றை புரட்டிப்பார்த்தால், இந்த ஏழுகிணறு'க்கு ஒரு ஜீவனுள்ள கதையே இருப்பது தெரியவரும்.
இப்போதைய சென்னை அந்த காலத்தில் சென்னப்பட்டினம்' என்றும், மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டது. 1552ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்கள் வந்து சாந்தோமில் குடியேறி ஜவுளி மற்றும் வாசனை திரவிய வியாபாரத்தை தொடங்கினர். சென்னை நகரும் தொழில் நகராக வளரத் தொடங்கியது.
அதன்பின்னர், 1653ம் ஆண்டு சென்னப்பட்டினம், சென்னை மாகாணம் என்று பெயர் மாறியது. 1746ம் ஆண்டு பிரெஞ்சுகாரர்களின் கைவசம் இருந்த சென்னை மாகாணம், ஆங்கிலேயர் கைக்கு மாறியது. 1947ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் கைவசம்தான் இருந்தது.
சென்னை மாகாணம் 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுபோல், மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997ம் ஆண்டு சென்னை என்றும் மாற்றப்பட்டது. வெறும் 30,000பேர் வசித்த சென்னையில் இன்று 60 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
மெட்ராஸ் பட்டினம் என்ற பெயரில் சென்னை இருந்தபோது, குடிநீர் தேவைக்காக பாரிமுனை அருகே 7 கிணறுகள் தோண்டப்பட்டன. இந்த கிணறுகளில் இருந்து 1772ம் ஆண்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. சென்னை நகரின் முதல் குடிநீர் திட்டம் இதுதான். இங்கிருந்துதான் ஜார்ஜ் கோட்டைக்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மக்கள் தொகை பெருகப் பெருக சென்னை நகரின் குடிநீர் தேவையும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து பல புதிய குடிநீர் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு, வீராணம் குடிநீர் திட்டம் மூலமும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்தும் நீர் கொண்டு வரப்படுகிறது.
அன்றைய சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 7 கிணறுகள் இருந்த பகுதிதான், ஏழுகிணறு என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அந்த 7 கிணறுகளின் நிலைமை இன்று பரிதாபமாக காட்சி அளிக்கின்றன.
ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ராணுவ குடியிருப்புக்குள்ளேதான் இந்த 7 கிணறுகளும் உள்ளன. இந்த கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீர், அங்குள்ள பெரிய கிடங்கில் தேக்கி வைத்து வினியோகிக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு காலத்தில் தற்கொலை செய்துகொள்பவர்கள் இந்த கிணறுகளில் விழுந்துதான் இறந்துள்ளனர். இதனால், பாதுகாப்பு கருதி கிணறுகளின் மேலே அப்போது கூரை போடப்பட்டது.
தற்போது, இந்த கூரைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. 5 கிணறுகள் பாழ்பட்டு போய்விட்டன. 2 கிணறுகளில் இருந்து மட்டும் தற்போது தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீரும் சுத்தமாக இல்லாததால், சுத்திகரிக்கப்பட்ட பின்னர் அங்குள்ள 48 ராணுவ அதிகாரிகள் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
கூடுதல் குடிநீர் தேவைக்கு, கடந்த 10 ஆண்டுகளாக வெளியே இருந்துதான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
சென்னை நகருக்கே ஒரு காலத்தில் குடிநீர் வழங்கிய 7 கிணறுகளை தற்போது போய் பார்த்தால் கண்கலங்கத்தான் செய்கிறது. இந்த 7 கிணறுகளையும் தூர்வாரி சரிசெய்தாலே வடசென்னையின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முடியும். எனவே, இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.