ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று ஆடிப் பூர விழா மிக விமரிசையாக நடந்தது.
இந்தத் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆண்டாள் அவதார தினமாகக் கருதப்படும் இன்றைய தினத்தில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடப்பது வழக்கம்.
இதே போல இன்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் திருத்தேருக்கு எழுந்தருளினர். காலை 8.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேல்மருவத்தூரில் ஆடிப்பூரவிழா
அதே போல மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா பங்காரு அடிகளார் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் உச்ச நிகழ்ச்சியான கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பாலாபிஷேகமும் நடைபெற்றன. விழாவையொட்டி கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன.
ஆதிபராசக்தி கருவறை மற்றும் புற்று மண்டபத்தின் முன்பாக நடைபெற்ற கலசவிளக்கு வேள்வி பூஜையை லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.