பெண் தியாகியின் நிலத்தை அபகரித்த ஏட்டு!
செங்கோட்டை: செங்கோட்டையை சேர்ந்த சுதந்திர போராட்ட பெண் தியாகியின் நிலத்தை ஏட்டு ஒருவர் அபகரித்துள்ளார். அது தொடர்பாக அந்த தியாகி மாவட்ட கலெக்டரிடம் புகார் தந்துள்ளார்.
செங்கோட்டை சேர்வைக்காரன் புதுத் தெருவை சேர்ந்தவர் கோதையம்மாள் (86). சுதந்திர போராட்ட தியாகியான இவர் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலெக்டர் ஜெயராமனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது தந்தையும், தியாகியுமான அழக்கப்பிள்ளை செங்கோட்டை திருவிதாங்கூர் மகாராஜாவிடம் பணி்யாற்றினார். அதற்காக ஊதியமாக, மானியமாக பெற்ற நிலம் எனது தந்தை பெயரில் உள்ளது. தாசில்தார் வழங்கிய பட்டா, அரசு ஆவணங்களிலும் எனது தந்தை பெயரில்தான் நிலம் உள்ளது.
செங்கோட்டை தாலுகா கீழுர் கிராமத்தில் உள்ள இந்த நிலத்தை குற்றாலத்தில் போலீசாக பணியாற்றும் மாரியப்பத் தேவர் என்பவர் வேலி போட்டுள்ளார். இதுகுறித்து கேட்டால் மிரட்டுகின்றனர்.
போலி ஆவணம், நில மோசடி மூலம் எனது நிலத்தை ஆக்ரமிப்பு செய்து அதில் உள்ள மரங்களை வெட்டி விட்டனர். எனவே இதுதொடர்பாக அரசு ஆவணங்களை ஆய்வு செய்து நிலத்தை மீட்டு தருவதுடன் எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் தியாகி கோதையம்மாள் தெரிவித்துள்ளார்.