ராமநாதபுரத்தில் புறா பந்தயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், மத்திய ராமநாதபுரம் பந்தயப் புறா சங்கத்தின் சார்பில் புறாப் பந்தயம் நடந்தது. அதில் சங்கத்தின் தலைவர் சந்திரனின் புறா முதல் பரிசைப் பெற்றது.
மத்திய ராமநாதபுரம் பந்தயப் புறா சங்கத்தினரால் பந்தயப் புறா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற புறாக்களுக்கான பரிசளிப்பு விழா ராமநாதபுரம் வலம்புரி மகாலில் நடைபெற்றது.
முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் எம். லியாகத் அலிகான் தலைமை வகித்தார். ஆசிரியர் எஸ்.முத்துமணி, வழக்கறிஞர் என்.பிரேம் சதீஷ், நகை வியாபாரி ஜோதிகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய ராமநாதபுரம் பந்தயப் புறா சங்கத் தலைவர் எம். சந்திரன் வரவேற்றார்.
போட்டிகள் தஞ்சையிலிருந்து ராமநாதபுரம் (220 கி.மீ) விக்ரபாண்டியிலிருந்து ராமநாதபுரம் (405 கி.மீ), சென்னை முதல் ராமநாதபுரம் (520 கி.மீ), ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து ராமநாதபுரம் (710 கி.மீ), ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து ராமநாதபுரம் (1005 கி.மீ) ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டன.
விஜயவாடாவில் இருந்து ராமநாதபுரம் வரை நடந்த போட்டியில், புறா சங்கத் தலைவர் எம். சந்திரனின் புறா 25 மணி-50 நிமிடம்-05 வினாடிகளில் வந்து சேர்ந்து முதல் பரிசைப் பெற்றது.
அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு அதிகப் புள்ளிகள் பெற்ற கே.முருகேசனின் புறாவுக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசை மதுரை ரேஸிங் பீஜியன் கவுன்சில் செயலாளர் டி.வில்பிரட், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் விவேகானந்தன் ஆகியோர் வழங்கினார்.
ஏற்பாடுகளை மத்திய ராமநாதபுரம் புறா பந்தய சங்கத்தின் தலைவர் எம்.சந்திரன், செயலாளர் அப்துல் சுக்கூர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். பாலா நன்றி கூறினார்.