1 லட்சம் அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை தர வேண்டும் - ரவிசங்கர் கோரிக்கை
தமிழக சுற்றுப்பயணத்தில் ரவிசங்கர் ஈடுபட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரவிசங்கர் பேசுகையில், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், அங்கு சொந்தமாக தொழில் புரிகிறார்கள். நல்ல வேலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கென சொந்தமாக வீடுகளும் உள்ளன. நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
அதேசமயம், 1983ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வசித்து வரும் கிட்டத்தட்ட 1 லட்சம் தமிழர்களும் முகாம்களியே வாடி வருகிறார்கள். அகதிகளாகவே உள்ளனர்.
அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்து இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்வதால் இங்கு வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தங்களது வாழ்க்கை மீது நம்பிக்கை வரும்.
இந்திய சமூகத்துடன் இலங்கைத் தமிழர்களை இணைத்துக் கொள்ளக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், வீடுகள், வேலைவாய்ப்பு உள்ளிட்டவையும் வழங்கப்பட வேண்டும்.
வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்த வசதிகள் எல்லாம் தரப்பட்டுள்ள நிலையில், ஏன் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் அனைவரும் பாராமுகமாக இருக்கிறோம் என்று தெரியவில்லை.
இலங்கையில் முகாம்களில் அடைபட்டுள்ள 3 லட்சம் தமிழர்களுக்கும் மீண்டும் மறுவாழ்வு கிடைக்க அனைவரும் உதவ வேண்டும் என்றார் ரவிசங்கர்.