வண்டலூர் பூங்காவில் வருகிறது பட்டாம் பூச்சி பூங்கா
ரூ. 5 கோடி நிதியில் நிறைவேற்றப்படவுள்ள இந்தத் திட்டம் குறித்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ளதைப் போல இந்த பட்டாம் பூச்சிப் பூங்கா அமையவுள்ளது. மேலும் சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் உள்ளதைப் போன்ற நைட் சபாரி வசதியும் இங்கு செய்யப்பட்டு வருகிறது.
பட்டாம் பூச்சிப் பூங்காவை அமைக்கும் பணியில் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் ஈடுபடவுள்ளது. இந்தப் பணியில் கேரள வன ஆய்வுக் கழகமும் உதவி செய்யவுள்ளது.
பட்டாம் பூச்சி பூங்காவில் விதம் விதமான செடி வகைகள் இடம் பெறஉம். மேலும் லேன்ட்ஸ்கேப், நீரூற்றுகள், மலைத் தோட்டங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். பட்டாம் பூச்சிகளுக்கேற்ற சூழல் இங்கு இயற்கையாக வடிவமைக்கப்படும்.
பட்டாம் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யவும், முட்டையிடவும் தோதான செடிகளும் இங்கு வளர்க்கப்படும். இந்தப் பகுதியில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் இருக்கும் வகையில் குளங்களும் வெட்டப்படும்.
விரைவில் இந்த திட்டத்திற்கு தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை அனுமதி அளிக்கும் எனத் தெரிகிறது. அதன் பின்னர் இந்த பட்டாம் பூச்சி பூங்கா வண்டலூர் பூங்கா வளாகத்திற்குள் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
இந்தியாவில் 1500 வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 300 வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.