ராமருக்கு தேள் மாலை-ஆந்திராவில் வினோத கோயில்
ஹைதராபாத்: ஆந்திராவில் உள்ள மலைராமர் கோயிலில் சுவாமிக்கு தேள் மாலை அணிவிக்கும் வினோத பழக்கம் நடைபெற்று வருகிறது.
தேங்காய், பழத்துடன் கோயிலுக்குள் போய் வருபவர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால், கைகளில் தேள்களுடன் கோயிலுக்குள் செல்லும் பக்தர்களை பார்க்க வேண்டும் என்றால் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொடுமூர் மலைராமர் கோயிலுக்கு தான் போக வேண்டும்.
இங்கு வரும் பக்தர்கள் டப்பாக்களில் தேள்களை பிடித்து வருகின்றனர். பி்ன்னர் அவற்றுடன் கோயிலை மூன்று முறை சுற்றி வந்து தேள்களை மாலையாக நூலில் கோர்த்து சுவாமிக்கு அணிவித்து வணங்குகின்றனர்.
இதன்மூலம் பக்தர்கள் தங்களது விருப்பங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இது அனைவருக்கும் உகந்த கோயில் என்றாலும் தேள்களுடன் தொடர்பு கொண்ட விருச்சக ராசி பக்தர்களுக்கு அதிக செல்வ செழிப்பும், அதிர்ஷ்டமும் அடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
விவரம் தெரியாத சிலர் சாமி சிலையில் தேள் கூட்டம் இருப்பதை பார்த்து ஓட்டம் பிடித்துவிடுகின்றனர். மேலும் பக்தர்கள் கொண்டு வரும் தேள்களி்ன் வரவால் இப்பகுதி முழுவதும் தேள்மயமாகிவிட்டது.
இதையடுத்து அப்பகுதியில் அங்காங்கே தேள்கள் ஜாக்கிரதை என வாசகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த கோயிலுக்கு அதிக கூட்டம் வருவதால் தேள்களுக்கு கிடைப்பது அரிதாகிவிட்டது. இதையடுத்து அருகிலிருக்கும் கிராம மக்கள் தேங்காய், பழம் விற்பது போல் தேள்களை விற்று வருகின்றனர்.