3 பேருக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது
சென்னை: தமிழக அரசு வழங்கும் கல்பனா சாவ்லா விருது 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா விண்வெளி ஓடத்தில் பயணம் செய்து பூமிக்குத் திரும்பும்போது அகால மரணமடைந்த இந்திய பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயரில் ஆண்டு தோறும் தமிழக அரசு வீரச் செயலுக்கான விருதினை வழங்கி வருகிறது.
கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கான விருது இது.
ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது இந்த விருது வழங்கப்படும். ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான விருதினை மூன்று பேர் பெறுகின்றனர்.
டாக்டர் ராஜ மகேஷ்வரி, ராஜலட்சுமி, புஷ்பாஞ்சலி ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாக்டர் ராஜ மகேஷ்வரி சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவர் ஆவார். ராஜலட்சுமி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை ஆவார்.
புஷ்பாஞ்சலி, திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் ஹிதேந்திரன் மூளைச் சாவை சந்தித்தபோது அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்து தமிழ மக்களை நெகிழவித்தவர்கள் அவரது பெற்றோர். அதன் பின்னர்தான் தமிழகத்தி்ல உறுப்பு தானம் குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.