உயரிய சேவையில் ஆலங்குளம் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்
ஆலங்குளம்: ஆலங்குளம் அரசு மருத்துவதமனையில், இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார்.நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஜெனோவா புஷ்பம். இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.
இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கணவர் பெயர் ஜான்சன். ஜெனோவா புஷ்பத்திற்கு சிறுவயதிலேயே வாகனங்களை ஓட்டுவது என்றால் அலாதி பிரியம். இதனால் லைட் வெயிட் டிரைவிங் முடித்த இவர் திருமணத்திற்கு பின் ஹெவி வெயிட் டிரைவிங் பயிற்சிக்கு ஐஆர்சி மூலம் தேர்வு செய்யப்பட்டார்.
பின்பு நெல்லையில் ஹெவி டிரைவிங் பயி்ற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தார். கடந்த 2008ம் ஆண்டு சுகாதார துறையில் டிரைவராக இவருக்கு வேலை கிடைத்தது.
இதையடுத்து ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக ஜெனோவா புஷ்பம் பணியாற்றி வருகிறார். உயிர் காக்கும் முக்கிய வாகனமான ஆம்புலன்சில் ஜேனோவா புஷ்பம் டிரைவராக பணியாற்றுவது சவாலுக்குரியதாக உள்ளது.
இதுபற்றி ஜேனோவா கூறும்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுவது மற்ற வாகனங்களை ஓட்டுவதை விட சவாலானது. சில நிமிடங்கள் தாமதித்தால் கூட உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும். அதோடு நாமும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸை ஓட்ட வேண்டும்.
ரிஸ்க் அதிகம் என்றாலும் உயிர் காக்கும் பணி என்பதால் இதை மனநிறைவோடு செய்து வருகிறேன். பெண்கள் பலர் கார் ஓட்டுகிறார்கள். ஆனால் அரசு துறை வாகனங்களில் டிரைவராக பெண்கள் இல்லை.
எனவே பெண்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் அவர்களுக்கு உடனடியாக அரசு துறைகளில் வேலை கிடைக்கும். இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.