தசைத்திறன் குறைபாடு உள்ளோருக்கான சிறப்பு பள்ளி - ஸ்டாலின் திறந்தார்
சென்னை: தசைத் திறன் (Muscular Dystrophy) குறைபாடு கொண்டோருக்கான சிறப்புப் பள்ளியை சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் இந்த சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டு, தசைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு நூலினையும் வெளியிட்டு, ஊனமுற்ற வர்களுக்கான மூன்று சக்கர நாற்காலிகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசுகையில், சென்னை மாநகராட்சி சார்பில், தசைக்குறைபாடு உடையவர்களுக்கான மாநகராட்சி சிறப்புப் பள்ளி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப்பள்ளியில் ஊனமுற்றோர் என்று சொல்லக்கூடிய எல்லாக் குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகளையும் சேர்த்து, அந்தக் குறைகளைப் போக்கக் கூடிய பயிற்சிகளை அளிப்பதோடு, கல்வியும் அளிக்கின்ற வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி மட்டுமல்லாமல் தசைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான அமைப்பு என்ற ஓர் அமைப்பும் இதில் பங்கேற்றுள்ளது.
2000வது ஆண்டில் டாக்டர் விஸ்வநாதனால் துவக்கப்பட்டு, பெற்றோர்கள் என்ற அளவில் ஜெயசுதா நெப்போலியன், குமரன், பாலகிருஷ்ணன் ஆகிய நிர்வாகிகளின் ஒத்து ழைப்புடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி, அவர்களின் சமூகத் தேவைகளை நிறை வேற்றுதல் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவது பாராட்டுக்கு உரியது.
புள்ளி விவரத்தின்படி பார்த்தால், பிறக்கின்ற 2500 குழந்தைகளில் ஒரு குழந்தை தசைத்திறன் குறைபாடு பிரச்சினையால் பாதிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமாக எடுத்துக்கொண்டால் சுமார் 30,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தசைத்திறன் குறைபாட்டுடன் இருப்பார்கள் என கருதப்படுகிறார்கள்.
தோராயமாக சென்னையில் மட்டும் சுமார் 3000 குழந்தைகள், இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கணக்கிட்டு உள்ளனர். மஸ்குலர் டிஸ்ட்ராபியால் பாதிக்கப்படும் குழந்தைகள் 10 வயதுக்குப் பின் தானாக நடக்க முடியாமல் சக்கர நாற்காலியிலே போக வேண்டிய நிலையை அடைகிறார்கள். இந்த நிலையால் அவர்கள் மற்ற குழந்தைகளைப் போல் பள்ளிக்கு சென்று படிக்கும் வாய்ப்பினை இழக்கிறார்கள்.
இந்த திட்டத்தின் அடிப்படையில் இந்த பள்ளியில் சேர பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் 28 பேர் பதிவு செய்துள்ளனர். இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்திட, முன் வந்துள்ள சென்னை மாநகராட்சியினை பாராட்டுகின்றேன்.
இந்திய அளவில் துவக்கப்படுகின்ற முதல் பள்ளி இது என்பது சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாகும்.
ஊடல் ஊனமுற்றோர்- தசைக்குறைபாடு நோய் உடையோர் அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிடவும், இது போன்றவர்களுக்குச்சேவை செய்ய தொண்டு நிறுவனங்களும், நல்ல மனம் படைத்த மனித நேயம் கொண்டவர்களும் முன்வர வேண்டும் என்றார்.
மத்திய அமைச்சர் நெப்போலியன், மேயர் மா.சுப்பிரமணியன், குழந்தை நரம்பியல் நிபுணர் டாக்டர் வி.விஸ்வநாதன் ஆகியோர் பேசினார்கள். எஸ்.வி.சேகர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.