ஒரே நாளில் 126 கல்யாணங்கள் - திணறிப் போன வடபழனி முருகன் கோவில்
சென்னை: ஆவணி மாதம், வளர்பிறை முகூர்த்தம் என்பதால் இன்று தமிழகம் முழுவதும் திருமணமயமாக காணப்பட்டது. சென்னை வடபழனி முருகன் கோவிலில் 126 கல்யாணங்கள் நடந்ததால் கோவிலே திணறிப் போனது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று தசமி திதி அமாவாசை வளர்பிறையில் முதல் முகூர்த்தம் ஆகும். மிக நல்ல தினம் என்பதால் இன்று பெருமளவில் திருமணங்கள் நடந்தேறின.
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் ஒரே நாளில் 126 கல்யாணங்கள் நடந்தேறின.
காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் 34 திருமணங்களும், ஏழரை மணியிலிருந்து 9 மணி வரை 32 திருமணங்களும் நடத்தி வைக்கப்பட்டன.
9 மணியிலிருந்து 10.30 மணி வரை 60 திருமணங்கள் நடந்தனவாம்.
கல்யாணம் தவிர 80-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காது குத்து நிகழ்ச்சியும் நடந்தது. மொட்ட போடவும் ஏக கூட்டம்.
கல்யாணம், காதுகுத்து, மொட்டை என மக்கள் குவிந்ததால், கோவிலே திணறிப் போனது. அக்கம்பக்கத்தில் உள்ள பூ, பழம், தேங்காய், மாலை விற்பனைக் கடைகளில் பெருமளவில் வியாபாரம் நடந்தது.