முதியவர்கள் தலையிடாமை தத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் - சுகிசிவம்
விருதுநகர்: வயதானவர்கள் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் தலையிடாமை தத்துவத்தை கடைபிடித்தாலே போதும் என்று ஆன்மிக சொற் பொழிவாளர் சுகிசிவம் விளக்கினார்.
வத்திராயிருப்பு சேவா பாரதி அமைப்பு சார்பில் இயற்கை உரவேளாண்மை, மரம் வளர்ப்பு, பாலிதீன் தவிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சொற்பொழிவு நடந்தது.
இந்த விழாவிற்கு இந்து பள்ளி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் சுகிசிவம் பேசியதாவது
ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு என்பது வரத்தான் செய்யும். கூடுமானவரை ஒத்துப்போக முயற்சிக்க வேண்டும்.
வயதானவர்கள் பேச்சை குறைத்துக் கொண்டால் தான் நிம்மதியாக இருக்க முடியும். நகைச்சுவையாக சொல்வதானால் "தலையிடாமை தத்துவம்' என்ற ஒன்று உள்ளது. அதை பின்பற்றினால் யாரும் நிம்மதியாக இருக்கலாம்.
ஒரு விஷயத்தை பற்றி நீங்கள் ஒரு அபிப்பிராயம் வைத்திருப்பீர்கள். மற்றொருவர் வேறொரு அபிப்பிராயம் வைத்திருக்கலாம்.
ஒருவர் முருகன் மீது பக்தி வைத்திருக்கலாம். ஒருவர் குருவாயூரப்பன் மீது பக்தி வைத்திருக்கலாம். அதற்காக இவர் தான் பெரியவர், அவர்தான் பெரியவர் என்று கருதுவதும், இது தான் சரி, இது தவறு என்று கூறுவதும் தவறு.
இந்த உலகத்தில் ஒரு கருத்துக்கு எதிர்கருத்து என்பது இருக்கத்தான் செய்யும். நூறுசதவீத முழுமையான மனிதன் என்று யாரையும் பார்க்க முடியாது.
வாழ்க்கை என்பது முன்பின்னாகத்தான் இருக்கும். அதை சமாளித்து அரவணைத்து வாழ்வது தான் வாழ்க்கை. அப்போது தான் நாம் நிம்மதியாகவும்,சந்தோஷமாகவும் வாழ முடியும் என்றார்.