இணையதள எழுத்துக்கு தனி அடையாளம் தேவை - எஸ். ராமகிருஷ்ணன்
மதுரை: இணையதள எழுத்துக்கு தனித்த அடையாளம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் உயிரோசை ஓராண்டு நிறைவு நடைபெற்றது.
இந்த விழாவில் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது...
இணையத்தில் எழுதும் பழக்கத்தை மறைந்த சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் மேற் கொண்டபோது தேடிச் சென்று அதை அறிந்தவன் நான்.
எழுத்தாளர்களுக்கு இலக்கியம், கவிதை, கதை என பரந்த வாசிப்புத்தளம் இணையத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
ஆரம்ப காலக்கட்டத்தில் திண்ணை முதலான இணையதளங்கள் தமிழில் இருந்தன. தற்போது கீற்று உள்ளிட்ட சிறு பத்திரிகைகள் கூட இணையதளத்திற்கு வந்து விட்டன.
தற்போது, இணையதளத்தில் வலைப்பக்கம் ஆரம்பித்து எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பத்திரிகைகளுக்கு கட்டுரை, கதை அனுப்பி அது பிரசுரமாகாமல் திருப்பி அனுப்பப்படும்போது அதை வலைப்பக்கத்தில் வெளியிடும் போக்கும் உள்ளது.
இணையத்தை தவறாகப் பயன்படுத்த அதிக சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஒருவரே வெவ்வேறு பெயர்களில் 5 வலைப்பக்கத்தை ஆரம்பித்து தாங்களாகவே அதற்குரிய கருத்துகளையும் எழுதும் நிலையும் உள்ளது. இதனால், இணையதள எழுத்துக்கு என்று தனித்த அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், இணையதளங்களில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப் படங்கள் இல்லை. பலருக்கும் புகைப்படங்கள்கூட இல்லை. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.