ரெட்டிக்கு ரூ. 1 கோடி செலவில் திருப்பதியில் கோவில்
ஆந்திர மக்களின் தோழனாக இருந்த முதல்வர ராஜசேகர ரெட்டி கடந்த 2ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். மக்கள் நல திட்டங்கள் மற்றும் தன்னை நாடி வருபவர்கள் உதவும் குணம் கொண்ட இவரது மரணம் ஆந்திராவை உலுக்கியது.
இந்த துயர செய்தியை கேட்டு பலர் அதிர்ச்சியில் இறந்தனர். மேலும் பலர் தற்கொலை செய்து கொண்டனர். அவருக்காக வாழ்வை மறித்து கொண்டவர்களின் எண்ணிக்கை 500க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அதிரடி சோதனைகள் மூலம் மக்களின் துன்பத்தை உடனடியாக நிறைவேற்றிய ராஜசேகர ரெட்டியின் புகழ் தற்போது முன்னாள் முதல்வர் என்டி ராமாராவுக்கு இணையாக மாறியுள்ளது.
என்டிஆரை கடவுள் என நினைத்து வழிபட்ட ஆந்திர மக்கள் தற்போது ராஜசேகர ரெட்டியையும் கடவுளாக நினைத்து அவருக்கு கோவில் கட்டும் பணியை துவக்கியுள்ளனர்.
ரெட்டியின் தொண்டர்களில் ஒருவரான டாக்டர் செவி பாஸ்கர் ரெட்டி என்ற தொழிலதிபர் திருப்பபதியில் ரூ. 1 கோடி செலவில் ரெட்டிக்கு பிரமாண்ட கோவில் ஒன்றை கட்ட துவங்கியுள்ளார். சுமார் 35 கிரவுண்ட் பரப்பில் இது கட்டப்பட இருக்கிறது.
இது குறித்து பாஸ்கர் ரெட்டி கூறுகையில்,
ராஜசேகர ரெட்டி மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார். கடவுள் கேட்கும வரங்களை வாரி வழங்குவார் என நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். நாங்கள் நேரில் பார்த்த கடவுள் ரெட்டி தான். அவர் தான் நாங்கள் கேட்டது அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.
அவரது சிலையை பிரமாண்டமாக அமைத்து அவருக்கு திருப்பதியில் கோவில் கட்ட இருக்கிறேன். அவரது பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வார்கள்.
கோவிலின் முதல் மாடியில் அவரது புகைப்படங்கள், வீடியோ படங்கள் காட்சிக்கு வைக்கப்படும். அவர் பயன்படுத்திய பொருட்களையும் இங்கு வைக்க உள்ளேன். இரண்டாவது மாடியில் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்றார்.