குழந்தைகளின் கனவுகளை நிஜமாக்க உதவ ட்விட்டர் விழா
பெங்களூர்: ஏழை குழந்தைகளின் படிப்பு, உணவு ஆகியவற்றுக்கு உதவும் வகையில் பெங்களூரில் உள்ள ட்விட்டர் பயனாளர்கள் ஒன்றிணைந்து வரும் சனிக்கிழமையன்று ட்விட்டர் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ட்விட்டர் இணையதளத்தின் மூலம் நண்பர்களாக மாறியவர்கள், ஆண்டுக்கு இரு முறை ட்விட்டர் விழாக்களை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சர்வதேச நிகழ்வையும, செப்டம்பரில் உள்ளூர் நிகழ்வையும் முன்னிறுத்தி இதை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையி்ல் இந்த விழாவின் சர்வதேச நிகழ்வு உலகம் முழுவதும் சுமார் 200 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் பெங்களூரும் ஒன்று.
இந்திரா நகரில் இந்த விழா நடைபெறுகிறது. உள்ளூர் ஏழை குழந்தைகளுக்கு உதவும் வகையில் நலநிதி சேகரிக்கும் நோக்கில் இது நடத்தப்படுகிறது. ஜெயநகரை சேர்ந்த ட்ரீம் ஏ ட்ரீம் என்ற என்ஜிஓ அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த என்ஜிஓ அமைப்பு பின்தங்கிய மற்றும் பலவீனமான குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உதவ நினைத்துள்ளது.
விழாவின் ஒருங்கிணைப்பாளர் ஹிரிஷ் தோடா கூறுகையில்,
சுவாரத்மா என்ற இசைக்குழுவினர் நடத்தும் நிகழ்ச்சியை இந்திரா நகரில் உள்ள கைரா பகுதியில் நடத்த தி்ட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் வசூல் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு ஏவை குழந்தைகளுக்கு உதவ இருக்கிறோம்.
தற்போது உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால், பல குழந்தைகள் வயிறார சாப்பாடு, தேவையான படிப்பு ஆகியவை கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இது அவர்களுக்கு ஒரு கனவாகவே இருக்கிறது.
இதனால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு வந்தது. இந்த குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றுவதே எங்கள் கனவு.
கடந்த பிப்ரவரியிலும் இது போன்ற நிகழ்ச்சி நடந்தது. ஆனால், எங்களுக்கு அப்போது ஒரு வார காலம் மட்டுமே இருந்ததால் நிகழ்ச்சிகளை வேகமாகவும், சுருக்கமாகவும் நடத்தினோம். அதில் வினாடி வினா போட்டி நடத்தினோம். டி-சர்ட்ஸ், தபால் அட்டை ஆகியவற்றை விற்பனை செய்தோம் என்றார்.
ரூ. 1.25 கோடி நிதி...
கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் உள்ள 202 நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏழைகளுக்கு சுகாதாரமான நீர் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அப்போது ஒரே நாளில் சுமார் ரூ. 1.25 கோடி நிதி திரட்டப்பட்டது. 55 குடிநீர் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, உகான்டா, எத்தியோபியா ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 17 ஆயிரம் பேர் இதனால் பயனடைந்துள்ளனர். இந்தியாவில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 2,079 பேர் இதன்மூலம் நல்ல நீரை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.