சிதம்பரம் நடராஜர் கோயில் ரூ.38 கோடியில் புதுப்பிப்பு!
சிதம்பரம் நடராஜர் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. இந்த உண்டியலில் பக்தர்கள் பணம் மற்றும் பலவித காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.
இந் நிலையில், 3 வது முறையாக நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூ.2 லட்சத்து 23,678 பணம் இருந்தது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளின் கரன்சிகளும் இருந்தன.
இந் நிலையில் கோயில் இணை ஆணையர் திருமகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடிநீர் தொட்டியை சீரமைக்கவும், நவலிங்க சன்னதியில் தரைத்தளம் சீரமைக்கவும் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நந்தவனம் மதில்சுவர் சீரமைப்பு பணிக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரமும், உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்க ரூ.7 லட்சத்து 20 ஆயிரமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயிலை புதுப்பிப்பதற்காக ரூ.38 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும், தமிழக சுற்றுலாத் துறையிடமும் நிதி கோரப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் கழிவறைகள், குளியல் அறைகள், குடிநீர் வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.