ராமலிங்க அடிகளார் வாழ்ந்த மலை, சிலை கண்டுபிடிப்பு
பண்ருட்டியில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ள சென்னப்பநாயக்கன் பாளையத்தையொட்டிய புஷ்பகிரி எனப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இந்த்ச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் வேல்முருகன் கொடுத்த தகவலின்பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் தமிழரசன், நாராயணமூர்த்தி ஆகியோர் ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்துள்ளனர்.
இப்போது உச்சிப்பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் இந்த மலைக்கோயில், பண்டைய காலத்தில் மலையாண்டவர் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் அம்மன் சன்னதியிலிருந்த வெண்கலச் சிலை புத்தராக, சமண தீர்த்தங்கரரின் சிலையாக இருக்கலாம் என இக்கிராம மக்கள் கருதி வந்தனர்.
இந்தச் சிலையில் "ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி'' என்று சம்ஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டு்ள்ளதை தொல்லியல் ஆய்வாளர்கள் தமிழரசன், நாராயணமூர்த்தி படித்தபோது தான் இது வள்ளலாரின் உருவச் சிலை என்பது தெரியவந்தது.
48 செ.மீ உயரமும், 22 செ.மீ அகலமும், 60 செ.மீ சுற்றளவும் கொண்ட இந்தச் சிலை, இடது கால் மீது வலது காலை மடித்து வைத்தும், இடது கை மீது வலக்கையால் மூடிய தியான நிலையில் காணப்படுகிறது.
இந்தச் சிலையை 1905ம் ஆண்டு பண்ருட்டியை சேர்ந்த ச.சொக்கலிங்க செட்டியார், விழமங்கலம் ந.வேலாயுத செட்டியார் ஆகியோர் தர்மம் செய்ததாகவும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.
1862ம் ஆண்டு வள்ளலார் எழுதிய கடிதம் ஒன்றில், "கருங்குழியிலிருந்து வடமேற்கே ஓர் ஊருக்குப்போய் அவ்விடத்தே முடிக்க வேண்டிய காரியத்தை முடித்துக் கொண்டு.. தற்காலத்தில் யான் வசிக்கும் இடம் இது வென்று குறிப்பதற்கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வள்ளலார் வாழ்ந்த இடங்களில் புஷ்பகிரியும் ஒன்று என்று தெரியவருகிறது என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை'' என்று இறைவனை ஜோதியாய் கண்டவர் ராமலிங்க அடிகளார்.