மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிரந்தர வணிகக் கூடம்
சென்னை: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயனளிக்கும் வகையில் ரூ. 14 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வணிககூடம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா விற்பனை கண்காட்சியை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர்களால் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி வரும் அக்டோபர் 1ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகளை விற்பனை செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு இந்த கண்காட்சி மூலம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த ஆண்டும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த கடைகளும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ. 14 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இது மார்ச் மாதம் திறக்கப்படும் என்றார்.