புதுபொலிவு பெறும் கட்டபொம்மன் நினைவிடம்-ரூ. 23 லட்சம் ஒதுக்கீடு
தூத்துக்குடி: வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடம் புதுபொலிவு ஜொலிக்க தமிழக அரசு ரூ. 23 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக சீற்றம் கொண்டு பொங்கி எழுந்த முதல் மாவீரர்களில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஆங்கிலேயரால் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தை தமிழக அரசு அவரது நினைவிடமாக மாற்றியுள்ளது.
ஆனால், இந்த நினைவிடம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து தமிழக அரசு கட்டபொம்மன் நினைவிடத்தை பராமரிக்க ரூ.23 லட்சம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த பணிகள் வெகு ஜோராக நடந்து வருகிறது.
நினைவிடத்தின் பின்புறம் 50 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.3.5 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், ரூ.9 லட்சம் செலவில் ஹைமாஸ் விளக்கு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சிலை வளாகத்துக்குள் இருக்கும் குறுகிய நடைபாதையை, அகலமானதாக மாற்றப்படுகிறது. ரூ.6.5 லட்சம் செலவில் சிறுவர்களுக்கான பூங்காவும் அமைக்கப்படுகிறது. மேலும், செயற்கை புல்வெளி, அலங்கார விளக்குகள், புதிய இருக்கைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.