மறந்து விட்ட தலைகள் - கண்ணீர் வடிக்கும் காந்தி சிலைகள்
இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் அறப் போராட்டம் நடத்தியவர் அண்ணல் காந்தியடிகள். அவர் தியாகத்தை போற்றும் வகையில் அக் 2ம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் அரசு விடுமுறை அளித்தும், மதுகடைகள், இறைச்சி கடைகளுக்கு முழுமையாக விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நேசிக்கப்படும் மகாத்மாவின் உருவ சிலைகள் ஊருக்கு ஒரு பகுதியில் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சி சிற்றாற்றின் கரையோரம் ஒரு மகாத்மா காந்தி சிலை அப்பகுதி காந்தியவாதிகளால் மழையிலும், வெயிலிலும் சேதம் அடையாமல் வைக்கப்பட்டுள்ள அந்த சிலை தற்போது எவ்வித பராமரிப்பின்றி முகம் சேதமடைந்து, குடை பகுதிகள் பராமரிப்பின்றி உள்ளது. நேற்று யாரோ ஒரு காந்தியவாதி ஒரு மாலையை வாங்கி போட்டு சென்றுள்ளார்.
செங்கோட்டை முத்துசாமி பூங்கா வளாகத்தில் ஒரு மகாத்மா காந்தி சிலை நகராட்சி பராமரிப்பில் உள்ளது. ஆனால் வெயிலிலும், மழையிலிலும் நனைத்து பராமரிப்பின்றி பறவைகள் எச்சமிட்டு செல்லும் சிலையாகவே உள்ளது. இச்சிலையை நேற்று நகராட்சியினர் யாரும் கண்டுகொள்ளவில்லை. வாடிய நிலையில் ஒரு மாலையுடன் கூடிய நார் மட்டும் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.
தாலுகா அலுவலகம் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையை காங்கிரசாரும், நகராட்சியும் புறக்கணித்து விட்டனர். ஆனால் அச்சிலையை தனது சொந்த செலவில் அப்போது ஒரு ஹோட்டல் உரிமையாளராக இருந்த நல்லி சொரணம் என்பவர் வைத்தார். இன்று அவர் அனைத்தையும் இழந்த நிலையில் ஆண்டு தோறும் மகாத்மாவை மட்டும் மறக்காமல் கூலித் தொழில் செய்து அந்த பணத்தில் பெயிண்டு செய்து அவரை தொடர்ந்து வழிபட்டு வருகிறார்.
ஆனால் இந்த காந்தி சிலை இருக்கும் பகுதியை சுற்றி கழிவுநீர் தேங்கும் பகுதியாக இருந்தும் நகராட்சி நிர்வாகமோ, காங்கிரஸ் தலைவர்களோ கண்டு கொள்வது கிடையாது.
காந்திதான் போய்ட்டாரே என்று நினைத்து விட்டார்களோ என்னவோ...!