சமச்சீர் கல்வி:மாதிரி பாடதிட்டம் ஒரு வாரத்தில் தயார்-கல்வி துறை
கோவை: சமச்சீர் கல்வியின் மாதிரி பாடத்திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகிவிடும் என அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கௌரவ ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நல்ல விஷயங்களை ஒன்று சேர்த்து ஒரு பொது கல்வி முறை வகுப்பதே சமச்சீர் கல்வி திட்டத்தின் லட்சியம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கோ, பள்ளிக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.
சமச்சீர் கல்வி திட்டத்தின் மாதிரி பாடத்திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும். இது அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்து கேட்கப்படும். இது குறித்து வரும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
சமச்சீர் கல்வி பற்றி அறிந்த தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள், அக்கல்வி முறைகளை தங்களது பள்ளிகளிலும் அறிமுகம் செய்ய பலர் ஆர்வமுடன் உள்ளனர். எந்த கல்வி முறையாக இருந்தாலும், எந்த பள்ளியாக இருந்தாலும் குழந்தைகளின் கல்வி நலன்தான் முக்கியம்.
ஒரு நல்ல திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும். குழந்தைகளை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்ற, ஒவ்வொரு ஆசிரியரும் ஒத்துழைக்க வேண்டும் .
அரசு மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை. தமிழக பள்ளிக் கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும் என்பதே லட்சியம். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.