வயதான பெற்றோர்களை கவனிக்காவிட்டால் தண்டனை
சென்னை: பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் பெற்றோர்களின் துயரங்களை துடைக்க தமிழக அரசு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வர இருக்கிறது. இதையடுத்து பெற்றோரை கவனிக்க தவறினால் சிறை தண்டனை அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் என தண்டனை விதிக்கப்பட இருக்கிறது.
தமிழக அரசு கடந்த 2007ல் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தை இயற்றியது. சமீபகாலமாக வயதான பெற்றோர்களை, பிள்ளைகள் சரியாக கவனிக்கவில்லை என தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது இந்த சட்டத்தில் சில மாற்றங்களை தமிழக அரசு கொண்டு வர இருக்கிறது.
இது குறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளர் ராம மோகன ராவ் கூறுகையில்,
சமூக நலத்துறையும், சட்டத்துறையும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அம்சங்களை செய்து வருகின்றன. புதிய சட்டத்தை அமல்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தை வருவாய் துறை கவனிப்பதா அல்லது சமூகத்துறை கவனிப்பதா என ஆலோசித்து வருகிறோம். இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும்.
இந்த சட்டத்தை பயன்படுத்தி தன்னை கவனிக்காத குழந்தைகள் மீது 60 வயதுக்கு மேலான பெற்றோர்கள் புகார் கொடுக்கலாம். ஆனால், பிள்ளைகள் மைனர்களாக இருந்தால் புகார் கொடுக்க முடியாது. இந்த புகார்களை பெற்றோர்கள் தான் கொடுக்க வேண்டும் என்றில்லை. அக்கம்பக்கத்தினரோ அல்லது சமுதாய அமைப்போ கூட கொடுக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்டிஓ தலைமையில் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்படும். புகார் கொடுக்க விரும்புவோர்கள், தங்களது புகாரை அங்கு கொடுக்கலாம். இது தொடர்பான புகார்கள் பராமரிக்கும், விசாரிக்கும் மற்றும் அறிக்கை அளிக்கும் பொறுப்பு சமூக நலத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பாயம் குறித்த மேல் முறையீடுகளை மாவட்ட கலெக்டெரிடம் கொடுக்கலாம். இந்த வழக்கில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் சிறை தண்டனை அல்லது ரூ. 5 ஆயிரம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படலாம் என்றார்.