புரட்டாசி சனி-இந்தாண்டு சைவ தீபாவளி!
சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை புரட்டாசி சனிக் கிழமை அன்று வருவதால் மக்கள் சைவ தீபாவளி கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறைச்சி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
நரகாசுரனை, கிருஷ்ணா கொன்ற தினமான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அல்லது ஐப்பசி மாதத்தில் வரும் அமாவசையில் கொண்டாடப்படுகிறது.
அன்று அசைவ பிரியர்கள் குளித்து முடித்து புத்தாடை கட்டி சிக்கன், மட்டன்கள் வகைகளை ஒரு கை பார்ப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அவர்கள் சைவ தீபாவளி கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக தீபாவளி புரட்டாசி மாதத்தில் வருவது மிக அரிதானது. அதுவும் சனிக்கிழமைகளில் வருவது இன்னும் அரிது. ஆனால், இந்த ஆண்டு எல்லாம் சேர்ந்து வந்துள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாள் வெள்ளி கிழமை என்பதால் அன்றும் அசைவம் சமைக்க முடியாது. மேலும் தீபாவளி முடிந்த மறுநாளே சஷ்டி விரதம் துவங்குவதால் முருக பக்தர்கள் சூரம்சம்ஹாரம் முடியும் வரை அசைவம் பக்கம் திரும்பி கூட பார்க்க முடியாது.
இதனால் தீபாவளி சீசனில் நல்ல வருமானம் பெற்று வந்த இறைச்சி கடைக்காரர்கள் பாடு திண்டாட்டமாகியுள்ளது.