செம்மொழி மாநாடு: அரசியல் கட்சிகளுக்கு வா.செ.குழந்தைசாமி வேண்டுகோள்
இது குறித்து கழகத்தின் துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
அடுத்த ஆண்டு ஜூன் திங்களில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை இந்திய தமிழர்களும், அயலக தமிழர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கின்றனர்.
அரசியல் கட்சிகள் இம்மாநாட்டில் கட்சி வேறுபாடு கருதாது, தமிழ் மொழியின் நலன் எண்ணி ஒத்துழைக்க வேண்டும் என்றும், மாநாட்டிற்காக அமைக்கப்படும் பல குழுக்களில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது பெரிதும் மன நிறைவோடு வரவேற்கத்தக்க ஆக்கபூர்வமான அழைப்பு என்றே தமிழ் நலன் கருதும் அனைவரும் மதிப்பீடுவர் என்பதில் ஐயமில்லை.
தமிழர்கள் எங்கு வாழினும், எதிரி சூழினும் தங்கள் உட்பகை தவிராத எளியர்கள் என்ற பெயரும், தமிழக அரசியல் ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் எந்த ஒரு பிரச்சனையிலும் ஒன்று சேரமாட்டார்கள் என்ற நிலயையும் மரபாகவே உருவாகி வரும் நிலையில் இருந்து நல்ல மாற்றம் ஏற்பட ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வட மொழியும் தமிழும் செம்மொழிகள் என அதிகாரபூர்வமாக மைய அரசு அறிவித்த பின், தமிழ்ச் செம்மொழிக்கென எடுக்கப்படும் இந்த மாநாடு, இந்திய துணை கண்டத்தின் நாகரீகத்தில், இலக்கிய, ஆன்மிக, தத்துவ பராம்பரியத்தில், தமிழுக்கும் சமபங்கு உண்டு என்பதை உறுதிபடுத்தும் வகையில் உலக அறிஞர்கள் ஆய்வு கட்டுரைகள் வழங்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் அனைத்து கட்சியினரும் அணிவகுத்து ஒன்று சேர்ந்து நடத்தும் மாநாடாக செம்மொழி தமிழ் மாநாடு அமைவது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும்.
இது மாபெரும் நிகழ்வின்றி ஒதுங்கி நிற்பதால் அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் அமையும் நன்மையோ அல்லது ஆளும் கட்சியினருக்கு ஏற்படும் நட்டம் என்பதோ இங்கு பிரச்சனை அன்று. இழப்பு என்னவோ தமிழ் அன்னைக்கு தான்.
உலக தமிழர்கள் பெருமைப்படும் வகையில் தமிழக தலைவர்கள் அணிவகுத்து நின்று இம்மாநாட்டை அர்ப்பணிப்பு உணர்வோடு நடத்திக் கொடுக்க வேண்டுமென ஆய்வினர் சார்பில் தமிழறிஞர்கள் சார்பில் வேண்டி கொள்வது கடமை என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.