நவம்பர் மாதத்தில் டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு
சேலம்: ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணிகளுக்கு வரும் நவம்பர் மாத்தில் தேர்வு நடைபெறும் என்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் காசிவிஸ்வநாதன் தெரிவித்தார்.
சேலம் வந்த காசி விஸ்வநாதன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசு கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தொடர்ந்து ஓராண்டாக 12 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போட்டித் தேர்வு குறித்து பேசி வருகிறேன்.
நவம்பர் மாதம் 1,200 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு நடைபெற உள்ளது. இதில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கும். வனத்துறை ரேஞ்சர் பணிக்கு 70 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப் பணிக்கு பட்டம் படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
குரூப் 2 தேர்வுகளை எந்த பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் எழுத முடியும். பட்ட மேற்படிப்புகள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே பயன்படும்.
அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்றார்.