பறவைகள் வருகை அதிகரிப்பு - வேடந்தாங்கல் சரணாலயம் நாளை திறப்பு
சென்னையில் இருந்து 80 கி.மீ தொலைவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து செல்வது வழக்கம்.
வேடந்தாங்கலில் அக்டோபர் மாதவாக்கில் பறவைகள் வருகை தொடங்கும். அதன்பிறகு, நவம்பர் மாதத்தில் பறவைகள் வருகை அதிகரிக்கும். டிசம்பர் மாதம் தொடங்கி, மே அல்லது ஜுன் வரை சீசன் நீடிக்கும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. கடந்த வாரத்தில் மழை தொடங்கியதும் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து, பறவைகளும் வரத் துவங்கியுள்ளன.
தற்போது, வேடந்தாங்கலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, பாம்புத்தாரா, மண்வெட்டி வாயன், சிறிய நீர்காகம், வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர்உடல் அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, வக்கா ஆகிய பறவைகள் ஏரியில் உற்சாகமாக வலம் வருகின்றன.
நாளை முதல், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.2. கேமராவுக்கு ரூ.25, வீடியோ கேமராக்கு ரூ.150.