2010 கும்ப மேளாவுக்கு ஆன்லைன் புக்கிங் ஆரம்பம்!
2010-ம் ஆண்டு கும்பமேளா வரும் ஜனவரி 14ம் தேதி ஹரித்வாரில் துவங்குகிறது. இதற்காக வெவ்வேறு பயணத் திட்டங்களை அறிவித்துள்ளது கல்பவசி.காம் இணையத்தளம்.
இந்துக்களின் புனித நிகழ்வுகளில் மிக முக்கியமானது கும்பமேளா. 12 ஆண்டுகளில் நான்குமுறை 4 முக்கிய புனித இடங்களில் இந்த விழா நடக்கும்.
கங்கை- யமுனை- பூமிக்குள் ஒடும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் அலகாபாத், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ஹரித்துவார், உஜ்ஜைனி மற்றும் நாசிக் நகரங்களில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை சுழற்சி முறையில் இந்த விழா நடக்கும்.
பூர்ண கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத்தில் நடக்கும். 12 பூர்ண கும்பமேளாக்கள் முடிந்த பிறகு அதாவது 144 வருடங்களுக்கு ஒருமுறை மஹாகும்பமேளா நடக்கும். இதுவும் அலகாபாத்தில்தான் நடக்கிறது.
2001ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 60 மில்லியன் பக்தர்கள் பங்கேற்றனர். 2003ம் ஆண்டு நாசிக்கில் நடந்த கும்ப மேளாவில் 70 மில்லியன் மக்கள் பங்கேற்றனர். உலக வரலாற்றில் இவ்வளவு பக்தர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு எங்கும் நடந்ததில்லை என செய்திகள் தெரிவித்தன.
உலகெங்கும் உள்ள இந்துக்கள், சாதுக்கள், பக்தர்கள் என பலதரப்பினரும் இந்த நிகழ்வில் திரளாகப் பங்கேற்கிறார்கள். இந்த பிரமாண்ட விழா துவங்குவதற்கு குறைந்தது ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே குறிப்பிட்ட நகரங்களில் போதிய வசதிகள், பயண ஏற்பாடுகளை அரசும், தனியார் அமைப்புகளும் இணைந்தும் தனித்தனியாகவும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த முறை உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடக்கிறது கும்பமேளா.
இந்த புனித நிகழ்வில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்காக பல்வேறு பயணத் திட்டங்களை அறிவித்துள்ளது கல்பவசி.காம் (www.kalpavasi.com) இணையதளம்.
பட்ஜெட்டுக்குள் சிக்கனமாக கும்பமேளாவை தரிசிக்க விரும்புவோருக்கென பட்ஜெட் பேக்கேஜ் திட்டமும், நல்ல ஆடம்பரமாக தரிசிக்க விரும்புவோருக்கு ஸ்டார் பேக்கேஜ் திட்டமும், கும்பமேளா நடக்கும் இடத்திலேயே தங்கியிருந்து அந்த அனுபவத்தைப் பெற விரும்புவோருக்கு தனி திட்டமும் அறிவித்துள்ளது இந்த தளம். மேலும் ஹரித்துவாரில் வீடு எடுத்துத் தங்கியிருந்து இந்த விழாவை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் தனித் திட்டம் உள்ளது.