தமிழக சிறைகளில் சூப்பர் சாப்பாடு - எடை அதிகரிக்கும் கைதிகள்!
சென்னை: ஆவி பறக்கும் உப்புமா அல்லது பொங்கல், சாம்பார் சாதம், விதம் விதமான காய்கறிகள், அவித்த வேர்க்கடலை, பருப்பு, நெய், பொறித்த கோழி.
ஏதோ பொன்னுச்சாமி அல்லது சரவண பவன் ஹோட்டல் மெனு கார்டு போலத் தெரிகிறதல்லவா. ஆனால் இதெல்லாம் கிடைப்பது தமிழக சிறைச்சாலைகளில்தான்.
வயிற்றுக்கு ஒத்துவராத கஞ்சி, கூழ் போன்றவையெல்லாம் இப்போது தமிழக சிறைச்சாலைகளில் மலையேறிப் போய் விட்ட உணவு ஐட்டங்கள். வெளியில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் விதம் விதமாக சாப்பிடுகிறார்களோ, அதே அளவிலான சலுகைகள், சத்தான உணவு வகைகள் இப்போது உள்ளே இருப்பவர்களுக்கும் கிடைக்கத் தொடங்கி விட்டது.
இதன் விளைவு - உள்ளே வரும்போது தயிர்வடை தேசிகன் போல இருப்பவர்கள் உள்ளே வந்த பின்னர் உசிலை மணி லெவலுக்கு மாறிப் போய் விடுகிறார்களாம்.
தமிழகத்தில் கடந்த 2007-08ம் ஆண்டு விடுதலையாகி வெளியே சென்ற கைதிகளில் 90 சதவீதம் பேர் அதிகரித்த எடையுடன்தான் சென்றுள்ளதாக புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மேலும், சிறைக்கு வந்த எந்த கைதியும் எடை குறையாமல் அப்படியே இருந்துள்ளனர் அல்லது அதிகரித்துள்ளனர் என்றும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த 2007-08ம் ஆண்டு மொத்தம் 4796 கைதிகள் விடுதலையாகினர். இவர்களில் 241 பெண்கள் உள்பட 4231 கைதிகளுக்கு ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை எடை அதிகரித்திருந்ததாம். மற்றவர்களுக்கு எடை குறையவில்லை. மாறாக அதே எடையுடன் இருந்தனராம்.
2006-07ல் ரிலீஸான கைதிகளில் 115 பேருக்கு 5 கிலோவுக்கும் மேலாக எடை அதிகரித்திருந்ததாம்.
இதுகுறித்து மனித உரிமைகளுக்கான கோர்ட்டின் சிறப்பு வக்கீல் கண்ணதாசன் கூறுகையில், தமிழக சிறைகளில் சரிவிகித உணவு அளிக்கப்படுகிறது. வெளியில் கூட இது கிடைக்காது.
கைதிகளுக்கு காலை சரியாக 6 மணிக்கு டீ தரப்படுகிறது. அதன் பின்னர் உப்புமா அல்லது பொங்கல் அல்லது வடித்த கஞ்சி தரப்படுகிறது.
பிற்பகலில் 650 கிராம் சாதமும், சாம்பார், மோர், காய்கறிகள் தரப்புகின்றன. தொடர்ந்து மாலையில் வேக வைத்த வேர்க்கடலை தரப்படுகிறது.
இரவு 550 கிலாம் அரிசியும், சாதமும் தரப்படுகிறது. இதுதவிர டாக்டர்கள் சில கைதிகளுக்கு சத்தான உணவுகள் தர பரி்ந்துரைத்தால், அவர்களுக்கு சப்பாத்தி, பருப்பு ஆகியவையும் தரப்படுகிறது என்றார்.
இதுதவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது 150 கிராம் கோழிக் கறியும் கைதிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதுபோக, ஏ வகுப்பு பெற்ற கைதிகளுக்கு வாரம் 3 முறை அசைவ சாப்பாடு தரப்படுகிறது. அதுவே சைவக் கைதிகளாக இருந்தால், காய்கறிகளுடன் பருப்பு, நெய்யும் சேர்த்து வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி நடராஜ் கூறுகையில், கைதிகளுக்கு தரப்படும் உணவில் போதிய சத்தும், கலோரியும் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்காக காண்டிராக்ட் முறையை வைத்துள்ளோம். மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களை வாங்கி வருகிறோம். கைதிகளுக்கு நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார்.
ஆனால் கைதிகளின் உடல் எடை அதிகரிப்புக்கு அவர்களுக்குத் தரப்படும் உணவு வகைகள் காரணல், உடல் உழைப்பு போதிய அளவில் கிடைக்காததே காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.
வழக்கறிஞரும், சமூக சேவகருமான சுதா ராமலிங்கம் கூறுகையில், கைதிகளுக்கு நல்ல உணவு கொடுக்கப்படுவதால்தான் அவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று கூற முடியாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது இயல்பானது. எனவே இந்த சாப்பாட்டை வைத்து கைதிகளுக்கு சத்தான உணவு தரப்படுவதாக கூற முடியாது என்றார்.
கைதிகள் உரிமை இயக்கத்தின் இயக்குநர் புகழேந்தி கூறுகையில், முன்பு போல இப்போது கைதிகளுக்கு வேலைகள் தரப்படுவதில்லை. முன்பெல்லாம் நிறைய வேலை கொடுப்பார்கள். அதற்குரிய ஊதியமும் கொடுப்பார்கள்.
தற்போது அது இல்லை. இதனால் அவர்களது எடை அதிகரிக்க முக்கிய காரணமாகி விடுகிறது என்றார்.
எப்படியோ, கைதிகள்தானே என்று அலட்சியம் பார்க்காமல் நல்ல சாப்பாடு தருவதை பாராட்டித்தான் ஆக வேண்டும்.