ரத்த தானம்-தமிழகம் முதலிடம்
சென்னை மருத்துவ கல்லூரியில் ரத்த கொடையாளிகள் என்ற அமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது. மருத்துவ மாணவர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பை நடிகர் ஜெயம் ரவி தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
மாணவர்கள் தங்கள் ரத்தத்தை வழங்குவதற்காக இந்த கிளப்பை ஆரம்பித்து இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. இதைப்போல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ரத்தம் வழங்கும் கிளப் தொடங்கப்பட வேண்டும்.
பிறருக்கு நாம் ரத்தம் கொடுப்பது என்பது ஒரு தாய், குழந்தைக்கு உயிர் கொடுப்பது போல. இதை தொடர்ந்து நாம் செய்தால் பல உயிரை காப்பாற்றி அவர்களுக்கு தாயாக இருக்கலாம். ரத்தம் கொடுப்பதற்கு உறவு தேவையில்லை. குருப் மட்டுமே போதும். எல்லோரும் சகோதர உணர்வுடன் நாம் ரத்தத்தை வழங்க வேண்டும்.
யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு நாம் அளிக்கும் ரத்தம் அவரின் உயிரை காப்பாற்றுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் வி.கு.சுப்புராஜ் கலந்துகொண்டு பேசுகையில், 'முன்பெல்லாம் ரத்தம் வழங்குவது வியாபார நோக்கமாக இருந்தது. ரத்தம் கொடுப்பதன் மூலம் பணம் பெற்று வந்தனர்.
தற்போது இந்த வழக்கம் மாறி தாமாக முன்வந்து ரத்த தானம் கொடுக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. மாணவர்கள் அனைவரும் ரத்தம் வழங்க முன்வந்துவிட்டால், நாட்டில் ரத்தத்துக்கே தட்டுப்பாடு இருக்காது.
கடந்த 2004ம் ஆண்டில் ரத்த தானம் கொடுப்பவர்களில் தாமாக முன்வந்து கொடுப்பவர்களின் எண்ணிக்கை 57 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. தாமாக முன்வந்து ரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது' என்றார்.
இதுவரை மொத்தம் 139 தடவை ரத்த தானம் வழங்கியுள்ள நரம்பியல் அறுவை சிகி்ச்சை நிபுணர் டாக்டர் கணகாவுக்கு நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.