துபாய் தமிழ்ச் சங்க 8வது ஆண்டு விழா
துபாய்:துபாய் தமிழ்ச் சங்க 8வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.துபாய் தமிழ்ச் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, அமீரகத்தின் 38 ஆவது தேசிய தினம் மற்றும் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு விழா ஆகியவை இந்தியப் பள்ளியில் அமைந்துள்ள ஷேக் ராஷித் அரங்கில் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
ஜெயந்தி மாலா சுரேஷ், வாசுகி, சுபா ஜெகந்நாதன், சந்திரா கீதாகிருஷ்ணன், நிர்மலா சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தினை ஆர்யா, அம்ருதா, நேஹா, கோபிகா, காவ்யாவும், அமீரக தேசிய கீதத்தை விபிஷ், ரோஷினி, அம்ரிதா, ஸ்வேதாவும் பாடினர்.
அமீரக தேசிய தினம் குறித்த உரையினை அம்ருதா கிரி நிகழ்த்தினார். துபாய் தமிழ்ச் சங்க தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. அப்துல் ரஹ்மான் துபாய் தமிழ்ச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தனது ஏற்புரையில் பல்வேறு மொழி, சமயங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் சகோதரத்துவ வாஞ்சையுடன் நாம் வாழவேண்டும் என வலியுறுத்தினார்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது உரையில் அமீரக தேசிய தினமான இந்நாளில் அமீரகத்தின் தேசியக்கொடியும், இந்திய தேசியக் கொடியினையும் குழந்தைகள் பறக்க விட்டு வலம் வந்த நிகழ்வு தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
விழாவில் இந்திய சமூக நலச் சங்கத்தின் கன்வீனர் கே. குமார், முன்னாள் அமைச்சர் ரகுபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், துபாய் தமிழ்ச்சங்க நிறுவன புரவலர் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்திய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வரும் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணியும், அவரது துணைவியாரும் புரவலர் ஷேக் தாவூது அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சி நடைபெற உதவி புரிந்த நிஸான் நிறுவனத்தின் நிர்வாகி ராஜ்குமார் வாகனங்களை சிறப்புடன் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பின்னர் 'இன்றைய இனிய இல்வாழ்க்கைக்கு பெரிதும் துணை நிற்பது அளவான பணமா, நிறைவான குணமா !' என்ற தலைப்பில் சன் டிவி கல்யாணமாலை புகழ் வாசுகி குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.
ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், சந்திரா கீதா கிருஷ்ணன், கவிதா பிரசன்னா, அபாகஸ் தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இசையமைப்பாளர் கங்கை அமரன் தலைமையில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பெனாசிர் வெற்றி பெற்றார். நிகழ்ச்சியினை மீரா கிரி வெகுசிறப்பாக தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். விழா சிறப்புற நடைபெற பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன், பொருளாளர் கீதாகிருஷ்ணன், இணைப்பொருளாளர் சுந்தர், பொழுதுபோக்குத்துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பாலகிருஷ்ணன், விஜயேந்திரன், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.