மார்க்கெட்டில் ரகளை செய்த யானை!
பணகுடி: காவல் கிணறு மார்க்கெட்டுக்குள் யானை புகுந்து ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்களாக அதைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பீதி பரவியது.
குமரி மாவட்டம் தக்கலையில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்காக நெல்லை மாவட்டம் பொட்டல்புதூரில் இருந்து 3 யானைகள் அழைத்து செல்லப்பட்டன.
நேற்று மாலை 3 யானைகளையும் காவல்கிணறு விலக்கில் கட்டி போட்டு விட்டு பாகன்கள் சாப்பிட சென்றனர். நீண்ட நேரம் கழித்து வந்த பாகன்கள் யானைகளுக்கு போதிய உணவு கொடுக்கவில்லை.
இதனால் வயிற்று பசியில் பிளிறிய ஒரு யானை திடீர் என்று மதம் பிடித்து இரும்பு சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் புகுந்தது. அங்கிருந்த முட்டைகோஸ், வாழைக்காய்களை அள்ளி, அள்ளி தின்றது. பின்னர் அங்கிருந்த வாழைக்குழைகளை துவம்சம் செய்தது. இதனால் வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம பிடித்தனர்.
இதை பார்த்த பணகுடி ரோஸ்மியா புரத்தை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி காமராஜ், யானையை விரட்டினார். கோபம் அடைந்த யானை தும்பிக்கையால் அவரை பிடித்து தூக்கி வீசியது. அவர் அதிர்ட்வசமாக வெள்ளரி மூட்டையில் விழுந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
காயம் அடைந்த அவர் நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விரைந்து வந்த யானைப் பாகன் யானையைப் பிடிக்க முயன்றார். பாகனை பார்த்து வெகுண்ட யானை அருகில் உள்ள வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தது. இரவு நேரம் என்பதால் யானையை பிடிக்க முடியாமல் பாகனும், மற்றவர்கள் திரும்பினர்.
இன்று காலை 2வது நாளாக பாகனும், மற்றவர்களும் யானையை பிடிக்க வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தனர். ஆனால் பாகன் கட்டுபாட்டுக்குள் வராமல் யானை அங்கும், இங்கும் தப்பியோடியது.
இன்று பகல் பணகுடி காய்கறி மார்க்கெட்டில் புகுந்த யானை அங்கிருந்த கடைகளை பிரித்து எறிந்து ரகளை செய்தபடி அங்கும், இங்கும் ஓடியது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து வேறு பாகனை அழைத்து யானையை பிடிக்க முயற்சி நடந்தது. அதுவும் முடியாததால் இன்று வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் அமைதி திரும்பியது.