சென்னையில் வாழைத் திருவிழா - மக்கள் ஆர்வம்
சென்னை: சென்னை தீவுத்திடலில் வாழைத் திருவிழா தொடங்கியுள்ளது.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ள கண்காட்சியில் வாழை நாரில் செய்யப்பட்ட சேலை, வேட்டி, சட்டை, கைவினைப் பொருட்கள் பார்வை மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதை விட முக்கியமாக 22 வகையான வாழைப் பழங்களில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் மக்கள் ருசி பார்க்க காத்துக் கொண்டுள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், இந்த வாழைத் திருவிழா தமிழகத்திலேயே முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தொடங்கி வைத்தார். இன்று வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் ஆ.சி.மோகன்தாஸ் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
10 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், தமிழ்நாட்டில் தற்போதைய சீசனில் கிடைக்கும் பூவன், பச்சை மோரிஸ், ரஸ்தாளி தொழுவன், ரஸ்தாளி கோழிக்கோடு, கற்பூர வாழை, மட்டி, செவ்வாழை, பச்சை வாடன், நேந்திரன், பேயன், ராஜாவாழை, மலை வாழை, பூவில்லா சண்டன், நாட்டு வாழை, குமணன், சக்கர கேளி, சக்கை போன்ற 22 வகையான வாழைப்பழங்களும், அந்த வாழைப்பழங்களில் செய்யப்பட்ட கேக், ரொட்டி, சுவீட், ஊறுகாய், ஒயின் போன்ற பல்வேறு வகையான உணவுப்பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
வாழை நாரில் தயாரிக்கப்பட்ட சேலை, சட்டை, பை, தரை விரிப்பு போன்ற பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
சேலை ரூ.600-க்கும், சட்டை ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
நிகழ்ச்சியில், வாழைப்பழத்தின் மகத்துவம் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மருத்துவ குழுவினர் விளக்கம் அளித்தனர். இந்த வாழைத்திருவிழாவை காண ராணி மேரி கல்லூரி மாணவிகளும், நிறைய பள்ளி மாணவர்களும் வந்திருந்தனர்.
நிகழ்ச்சி இன்றுடன் (முடிவடைகிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாக கண்டுகளிக்கலாம்.