பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.2 கோடி உதவி தொகை : பயனாளிகள் 10 ஆயிரத்து 524 மாணவ, மாணவிகள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சீர்மரபின கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 கோடிக்கும் அதிகமாக உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் விடுத்துள்ள அறி்க்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழக அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் 2010-2011-ம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர்களுக்கு 2 கோடியே 1 லட்சத்து 84 ஆயிரத்து 387 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அம்பை அரசு கலைக் கல்லூரி, நெல்லை அண்ணா பல்கலைக்கழகம், பாளை சித்தா கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதிதா இந்துக் கல்லூரி உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்து 524 மாணவ, மாணவிகள் பயன் அடைவர்.
விண்ணபித்த மாணவ, மாணவியர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இலவச கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.