12 சீடர்களுடன் கூடிய இயேசுநாதரின் சொரூபம் கண்டுபிடிப்பு
கன்னியாகுமரி: 12 சீடர்களை உள்ளடங்கிய இயேசு நாதரின் கை சொரூபம் நேற்று கன்னியாகுமரி கடலில் கண்டெடுக்கபபட்டது.
அந்தோனியர் குருசடியில் வைக்கப்பட்டுள்ள அந்த சொரூபத்தை ஏராளமான மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபித்து செல்கின்றனர்.
கன்னியாகுமரி அந்தோணியர் தெருவை சேர்ந்தவர் ராயப்பன். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஜெய்வந்த். கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஓன்றில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜெய்வந்த் பள்ளி செல்லும் நாட்கள் போக மற்ற நாட்களில் கடற்கரை பகுதிகளில் சிப்பி மற்றும் சங்குகள் எடுப்பது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் அப்பகுதி கடற்கரையில் சங்கு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது கடலில் உள்ள பாறை ஓன்றில் கனமான பொருள் ஓன்று தென்பட அதனை எடுத்தார். ஆனால் சிறுவன் ஜெய்வந்த்தால் அதனை தூக்க முடியவில்லை. இதனால் தன் தாய் உதவியுடன் அதனை எடுக்க முடிவு செய்தார்.
இதுகுறித்து அவர் தாயாரிடம் கூற அவர் கடலுக்குள் இறங்கி ஜெபம் செய்து அந்த பொருளை எடுத்தார். அது இயேசு நாதரின் கை சொரூபமாக இருந்தது.
இயேசு நாதரின் கை சொரூபத்துக்குள் 12 சீடர்கள் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. கை சொரூபத்தை அப்பகுதி மக்கள் அந்தோணியர் குருசடியில் வைத்து வழிபட துவங்கியுள்ளனர்.
12 சீடர்கள் பொறிக்கப்பட்ட அதிசய இயேசுநாதரின் கை சொரூபம் கடலில் கிடைத்த தகவல் அப்பகுதியில் பரவியதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்று வழிபட்டு வருகின்றனர்.