'மய்யம்' இணைய இதழ்: இலக்கியவாதிகளுடன் கமல் ஆலோசனை
நடிகர் கமல்ஹாசனின் 'மய்யம்' பத்திரிகை இணைய இதழ் வடிவில் கொண்டுவர ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
'ஆன்லைன் போர்ட்டல்' அல்லது 'பிளாக்' வடிவில் மய்யத்தை வெளிக்கொண்டுவர திட்டமிடப்படுகிறது.
ஆடியோ, வீடியோ பாட்கேஸ்ட் வசதியுடன் கமலுக்கென்று தனி பக்கமும் இதில் இருக்கும் என தெரிகிறது.
உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா தொழில்நுட்பம் குறித்து வாசகர்களுடன் கமல் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொள்ள கமல் திட்டமிட்டுள்ளார்.
அதோடு கமல் தனது இலக்கிய, எழுத்துப் பயணத்தையும் மய்யத்தின் மூலம் தொடருவார் என தெரிகிறது.
கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களான வசனகர்த்தா கிரேஸி மோகன், தமிழறிஞர் ஞானசம்பந்தன், எழுத்தாளர் இரா.முருகன் மற்றும் நடிகை கௌதமி ஆகியோர் கொண்ட குழு மய்யம் இணைய தள வடிவமைப்பையும், செயல்திட்டத்தையும் நிர்வகித்து வருகிறது.
இதுதொடர்பாக மூத்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனை கமல் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார்.
இந்நிலையில், நேற்று நெல்லை வந்த கமல், நெல்லை பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் தொ.பரமசிவன், எழுத்தாளர் நீல.பத்மநாபான் ஆகியோரை சந்தித்து பேசினார்.
நேற்று காலை சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்த கமல், நெல்லை அருகே தச்சநல்லூரில் உள்ள நல்லமுத்து இயற்கை வேளாண் மையத்துக்கு சென்றார்.
அங்கு, மைய நிறுவனர் கணேஷ் ராஜாவுடன் மதிய உணவு சாப்பிட்ட பின்னர், அங்கிருந்து பாளை தெற்கு பஜாரில் உள்ள நெல்லை பல்கலைக் கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் தொ.பரமசிவனின் வீட்டிற்கு வந்தார்.
பேராசிரியர் பரமசிவனுடன் கமல்ஹாசன் சுமார் 3 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். சங்க இலக்கியம், ஆதிச்சநல்லூர் இடுகாடு, சைவம், வைணவம், பற்றி இருவரும் உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது கமலஹாசனுக்கு ஓவியர் இசக்கி வரைந்த பிரபலமான நரிக்குறத்தி படத்தையும், எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய அஞ்சு வண்ணத்தெரு என்ற நூலையும் கவிஞர் கிருஷி வழங்கினார்.
தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து இலக்கியவாதிகள், தமிழறிஞர்களுடன் உரையாடல் நடத்த இருப்பதாக கமலஹாசன் தெரிவித்தார். தொ.ப.வுடன் பேசிய பின்னர் கமலஹாசன் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.
அங்கு எழுத்தாளர் நீல.பத்மநாபானை இன்று சந்தித்து பேசுகிறார். கமலஹாசனுடன் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனும் கலந்து கொண்டார்.