செம்மொழி மாநாட்டுக்கு வருவோரைத் தங்க வைக்க 4900 அறைகள், 120 கல்யாண மண்டபங்கள் முன் பதிவு
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் தமிழறிஞர்கள் தங்குவதற்காக கோவையிலும், சுற்றுப் பகுதியிலும் 4900 அறைகள், 120 கல்யாண மண்டபங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
செம்மொழி மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியருடன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாநாடு தொடர்பான அனைத்துப் பணிகளையும் மே மாதத்திற்குள் முடித்துவிடும்படி மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செம்மொழி பூங்கா பணிகள் குறித்து அவர், மாவட்ட ஆட்சியர் உமாநாத்திடம் கேட்டறிந்தார்.
அதற்கு, செம்மொழி பூங்கா அமைப்பதற்கு பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. சென்னை நதிகள் புனரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என்றார் ஆட்சியர் உமாநாத்.
மாநாட்டையொட்டி ரூ.60 கோடியில் அமைக்கப்பட உள்ள 17 சாலைகள், ரூ.16 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருச்சி சாலை விரிவாக்கப் பணி, ஹோப் காலேஜ், ரயில்வே மேம்பாலம் ஆகிய பணிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கும்படி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை கேட்டுக் கொண்டார்.
அப்போது வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறுகையில், ரயில்வே மூலம் இருகூர், போத்தனூர் இடையே அமைக்கப்படும் அகலப்பாதையில் 50 மீட்டர் அளவிற்கு தனியார் இடம் உள்ளது. நிலத்தினை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்திக் கொடுத்தால் அப்பணியும் விரைந்து முடியும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட, மாநாட்டு தங்கும் இட ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், ஊரகத் தொழில்துறை அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி கூறுகையில்,
கோவை மாநாட்டில் கலந்து கொள்ள வரும் தமிழறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோர் தங்குவதற்கு 4,900 அறைகளும், பணியாளர்கள், பொதுமக்கள் தங்குவதற்கு 120 மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.