விளாத்திகுளத்தில் நரிக்கறி விற்பனை படுஜோர் - கவனிக்காத வனத்துறை!
விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கருவேல மரங்கள் நிறைந்த சமூக நல காடுகள் அதிகம் உள்ளன. அங்கு நரி, முயல், மான், பாம்புகள் மற்றும் ஏராளமான பறவைகள் உண்டு.
வனவிலங்குளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக சிலர் 2 நரிகளை கொன்று அதன் இறைச்சியை கிலோ ரூ.50 என்று விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 2 நரிகளின் இறைச்சியும் விற்று தீர்ந்தன. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நரிகளின் வாய் பகுதி சிதைக்கப்பட்டிருந்து.
வெங்காய வெடிகள் மூலம் நரிகள் கொல்லப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. நடுரோட்டில் நடந்த நரிக்கறி விற்பனையை பார்த்து பதறிய சிலர் விளாத்திகுளத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு புகார் கொடுக்க சென்றனர். ஆனால் அந்த அலுவலகம் வழக்கம் போல் பூட்டப்பட்டிருந்தது.