எய்ட்ஸ்-எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு ரூ.1 கோடி ஓதுக்கீடு
நெல்லை: தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க அரசு ரூ.1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
எச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை தரம் மேம்பட அவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ செலவிற்கு ஆதரவு அளிக்க தமிழ்நாடு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் எய்ட்சால் 4424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3018 பேர் ஏஆர்டி மையத்தில் பதிவு செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 209 பேர் குழந்தைகள் ஆவர்.
இதில் தாய், தந்தை இருவரையும் இழந்த எச்ஐவி பாதிக்கப்பட்ட 43 குழந்தைகள். எச்ஐவியால் இறந்தவர்களின் 11 வாரிசுகள் உள்பட 65 பேருக்கு இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
இதில் 5ம் வகுப்பு வரை படிக்கும் 39 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் ரூபாய், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 22 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரூபாய், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 4 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் உள்பட மொத்தம் 1.64 ரூபாய் வழங்கப்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த கல்வி உதவி தொகையை வழங்கி அமைச்சர் மைதீன்கான் பேசுகையில்,
எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், எய்ட்சால் இறந்த பெற்றோரின் வாரிசுகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்க தமிவக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரவாணிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நரிக்குறவர்களுக்கு தனி நலவாரியம், திருமணமாகாத பெண்களுக்கு உதவி தொகை உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றார்.